Friday, August 7, 2009

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் !

சிறுவயதில் ஒருநாள் அப்பா என்னிடம் கேட்டார் " வளர்ந்து என்ன ஆகப்போற மக்களே? நான் கண்டக்டர் ஆவேன் டாடி ..! "அப்பா ஒரு டாக்டரையோ இஞ்சினியரையோ எதிர்பார்த்திருந்திருப்பார். நான் சொதப்பிவிட்டேன் . அப்பா முகம் மெல்ல மாறியது. குரல் சற்று கடுமையாக ஏன் என்றார். ஏன்னா கண்டக்டர் தான் கை நிறைய பை நிறைய ரூவா வச்சிருப்பார் டாடி ..! அடுத்த அரைமணி நேரம் நீதி போதனை வகுப்பு நடந்தது.

இன்றுவரை இந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு பெரிய குறிக்கோள், இலக்கு எல்லாம் கிடையாது. "எது நடக்கிறதோ அதுவே அது" என்றே வாழ்க்கை ஓடுகிறது இன்றுவரை. அன்று அப்பாவின் அறிவுரைக்குப்பின் மருத்துவம் படிக்கலாம் என்று முடிவு செய்தேன்.
பொதுவாக பழுதின்றி நன்றாகப் படிக்கக் கூடியவன்தான். நல்ல மதிப்பெண் எடுக்ககூடியவன்தான். நான் நாலாம் வகுப்புவரை படித்த அந்த பள்ளியில் அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தேர்வு நடக்கும்போதே நாம் சென்று பதில்களை டீச்சரிடம் கேட்டுக் கொள்ளலாம். அது அரசு ரப்பர் கழகம் நடத்தும் ஊழியர்களின் குழந்தைகளுக்கான பள்ளி.

நான்காம் வகுப்புவரை நான் வீட்டில் படித்ததாக ஞாபகம் இல்லை.பின்பு வேறு ஊர். வேறு பள்ளி என தொடர்ந்தது. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். பதினொன்றாம் வகுப்பிலிருந்து ஆரம்பித்தது ஆட்டம். படிப்பைத் தவிர எல்லாவற்றிலும் நாட்டம். மொத்த வகுப்பும் என்னை விட முன்னே சென்றுகொண்டிருந்தது. “நடந்த பிள்ளை தவழுதடா” என்றானது என் நிலைமை. வீட்டில் கவலைப்பட்டாலும் பயனில்லை. கிட்டத்தட்ட தண்ணீர் தெளித்து விட்டார்கள்.அந்த வகுப்பில் பன்னிரண்டாம் வகுப்பிற்கான அடிப்படைகள் எதுவும் கற்றுக்கொள்ளாமலே இருந்தேன். தேர்ச்சி பெறுவதே ஐயமாகிப்போனது.
ஒருவழியாக ப்ளஸ் டு எனப்படும் 12 ஆம் வகுப்பு.அண்ணா யுனிவர்சிட்டி கனவில் அவனவன் ஐந்தாறு டியூஷன்களுக்கு பறந்து கொண்டிருந்தான். நானும் போறேண்டா டியூஷனுக்கு என்று நான்கு டியூஷனுக்கு போனேன் தமிழ் ஆங்கிலம் தவிர்த்து. வீட்டில் அனைவரும் தூங்கிய பின் தூங்கி எல்லாக்கும் முன் எழுந்து பின்பு டியூஷனில் வாத்தியார் முன் தூங்கி வகுப்பு ஆரம்பிக்கும் முன் எழுந்து காலம் கழித்தேன். இறுதித் தேர்வுகளில் 86 சதவிகித மதிப்பெண்கள் பெற்றேன்.
எதற்காகவும் நான் அன்று கவலையே படவில்லை.நான் படித்துக் கிழித்த லட்சணத்திற்கு 240 கட் ஆப் மதிப்பெண்களே கிடைத்தது. திருச்சியில் counselling எனப்படும் ஒற்றைச்சாளர முறைப்படி கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் நாள் வந்தது.
பொறியியல் பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. பொறியியல் கல்லூரிகள் பற்றியும் அறிந்திருக்கவில்லை. இப்போது யோசித்துப் பார்த்தால் எதோ ஒரு குருட்டு யூகத்தின் அடிப்படையில் ஆடிய சூதாட்டம் போலவே தோன்றுகிறது.எந்த நல்ல கல்லூரியும் அன்று இல்லை. ஒரு ஜாதி மற்றும் ஊர் பெயரைக் கொண்ட பெயரில் பழமை கொண்ட கல்லூரி ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். ஒன்றும தெரியாதவனுக்கு எந்தக் கல்லூரியானால் என்ன? ஒரு குருட்டுப்பூனை இருட்டில் பாய்ந்தது போல என் professional life இல் நுழைந்தேன்.
கல்லூரிக்குப் போனபின்தான் தெரிந்தது அது பெயரில் மட்டுமே பழமை கொண்டது என்று. இயந்திரத் பொறியியல் துறை மிக வறண்டதாகக் காணப்பட்டது.வேறு வழி..? ஆண்டுகள் மிக வேகமாகக் கழிந்தன.

வெகு சீக்கிரமே இறுதி ஆண்டு வந்துவிட்டது. "campus interview " மூலம் நிறைய பேர் வேலை பெற்றுக்கொண்டிருந்தனர்,(ரொம்பவும் கற்பனை வேண்டம் எங்கள் கல்லூரி பற்றி...,) பிற கல்லூரிகளில். "Off Campus " வாய்ப்புகள் மூலம் எங்கள் கல்லூரியிலிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாணவர்கள் வேலை பெற்றுக்கொண்டிருந்த சமயம் அது.
வேறு துறை நண்பர்களெல்லாம் "அங்கே 2 lakhs per annum இங்கே 2.5 lakhs per annum என்றெல்லாம் நிறுவனங்கள் பற்றியும் சம்பளம் பற்றியும் பேசிக்கொண்டிருப்பார்கள். தகவல் தொழில்நுட்பத் துறை உச்சத்தில் இருந்த சமயம் அது. (ஆண்டு 2005 ). மெக்கானிகல்குதான் IT இல் வாய்ப்புகள் இல்லையே. நாங்கள் ஹாஸ்டலில் கும்பலாக உக்கார்ந்து வெட்டிக்கதை பேசிக்கொண்டிருப்போம்.
அவர்கள் லட்சக்கணக்கில் பேசும்போது நாங்கள் கிண்டலுக்கு " டேய் முப்பது ரூவாடா..! முப்பது ரூவா குடுத்தேண்ணா மூணு நாள் கண்ணு முழிச்சு வேல பாப்பேண்டா ..! என கவுண்டர் ரீதியில் " ஒரு நாலாயிரமோ ஐயாயிரமோ நீங்களா பார்த்து போட்டுக்குடுத்தீங்கண்ணா, கூழக்கும்பிடு போட்டு வேல பாப்போம்" என்று கிண்டல் அடித்து சிரிப்போம்.

படிப்பும் சீக்கிரத்தில் முடிந்துவிட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்றோம். முதல் இரண்டு வாரங்கள் வீட்டில் ராஜபோகமான வாழ்க்கை, நல்ல சாப்பாடு முன்மதிய வேளைகளில் துயிலெழுதல் என்று நன்றாக கழிந்தது பொழுது. ஒரு மாதம் கழித்து முதல்முறை வேலை, வாழ்க்கை பற்றிய பயம் வந்தது.
Boyhood இல் இருந்து Manhood ஆக Adulthood எய்துவதை விரும்பாத மனநிலையில் ஆனால் மாறியே ஆகவேண்டிய கட்டாயத்தில் நான். தெரிந்தவர் ஒருவர் மூலம் பெங்களூரில் ஒரு சிறிய வேலை கிடைத்தது. சம்பளம் பற்றியெல்லாம் பேசவில்லை. நானும் பெங்களூருக்கு போறேன்..! பெங்களூருக்கு போறேன்..! பெங்களூருக்கு போறேன்..! என்று கத்தாத குறையாக எல்லாருக்கும் டாட்டா காட்டிவிட்டு வண்டி ஏறி பெங்களூர் வந்தேன்.

நான் முதல் முறையாக பார்த்த வெளிநாடே பெங்களூர் தான். அதிகபட்சமாக மும்பை. பெங்களூர் .... உங்களுக்கு சொல்லவே தேவையில்லை. எங்கு நோக்கினும் கலர்களடா என்னுமளவிற்கு வண்ணமயமான பெண்களூர்.
சாப்பாடு தண்ணீர் கூட இல்லாமல் சாலையில் நடந்தாலே போதும் பொழுது போய்விடும், ஜென்மம் சாபல்யமடையும்.
அங்கே நான் வேலை பார்த்த நிறுவனத்தில் முதல் ஒரு மாதம் பயிற்சி.பெரிதாக வேலை எல்லாம் இல்லை.( இப்போது அந்த நிறுவனமே இல்லை என்பது நமக்குத் தேவைல்லாத விஷயம்). முதல் மாத சம்பள நாள் நெருங்கியது. மனதுக்குள் திக் திக்.
எவ்வளவு சம்பளம் கொடுப்பார் ? என்ன வேலை செஞ்சு கிழிச்சிட்டோம்? எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கிட வேண்டியதுதான்.. இல்லாட்டி பூவாவுக்கு சிங்கி அடிக்கணும் என்றெல்லாம் பல சிந்தனை.
முதலாளி சம்பளத்தை எண்ணி ஒரு கவரில் போட்டு கொடுத்தார். அவர் வெளியே சென்றபின் எண்ணிப்பார்த்தேன்.
( இது வேற எண்ணி ."count" ).

மிகச்சரியாக நாலாயிரம் ருபாய் இருந்தது.

6 comments:

  1. "எங்கு நோக்கினும் கலர்களடா என்னுமளவிற்கு வண்ணமயமான பெண்களூர்." nice one

    ReplyDelete
  2. hi da its too gud to see this...

    its remembering our golden days.

    ReplyDelete
  3. perumbalum idhe nilaimai dhan. enna seivadhu.

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !