Sunday, September 15, 2013

ஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்!

சாரு  நிவேதிதா தனது நண்பர்களோடும் ஜெயமோகன் தனது நண்பர்களோடும் சில வாரங்களுக்கு முன் இமயமலை நோக்கி ஒரு பயணம் சென்று திரும்பி வந்தது நாம் அனைவரும் அறிவோம். ம்ம்ம் ..சரி சரி நம்மில் சிலபேர் அறிவோம். அதுவொன்றும் சரிந்து விழும் இந்தியப் பொருளாதாரத்தை  நிமிர்ந்து எழச் செய்யும் ஒரு முக்கியமான விஷயம் இல்லை என்றாலும் வலையுலகில் அது குறித்து சிற்சில சர்ச்சைகள் எழுந்துள்ளன. சாரு நிவேதிதா  இமயம் செல்ல தேர்ந்தெடுத்த பாதை மிக மிக அபாயமானது என்றும் இடுப்பு செத்த பயலுவள் தான் சொகுசான பாதையில் செல்வர் என்று ஜெயமோஹனை இடித்துரைத்தது தனது பயணத்தின் துவக்கத்திலேயே நடந்தது.  ஜெயமோகன் இதுகுறித்து எந்த ஒரு எதிர்வினையும் எழுப்பாமலேயே சென்று வந்து பயணத்தை பற்றிய தொடரையும் எழுதிக் கொண்டிருக்கிறார். 

சாருவின் தொண்டரடிப் பொதிகளில் முக்கியமான ஒருவரான பிச்சைக்காரன் அண்மையில் கவிஞர்...? ரியாஸ்  குரானாவிடம் ஒரு பேட்டி  என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

சாரு இமயம் போனால் , ஜெயமோகனும் போகிறார்,,,அவர் கல்யாணத்துக்கு போனால் இவரும் போகிறார்...உங்கள் கருத்து ? :)  

அட இதிலென்னப்பா இருக்கிறது ? இருவரும் ஒரே சமயத்தில் (கிட்டத்தட்ட) இமயமலை சென்றது ஒரு தற்செயல் நிகழ்வுதான். மரபான பாணியில் ஒரு பயணக் கட்டுரையும் பின் நவீனத்துவ , transgression பாணியில் ஒரு பயணக்கட்டுரையும் கிடைக்கிறதே என்று எளிதாக எடுத்துக் கொண்டு போயிருக்கலாம்.
மாறாக தமிழர்தம் குலத்தொழிலாம் பகடி மட்டுமே என் பணி என்று கிண்டல் மட்டுமே வருகிறது பிச்சைக்காரரிடமிருந்து.
சாருவின் அண்மைய பயணங்கள் பற்றி எனக்கு ஒரு ஞானமும் இல்லை. ஆனால் கூபா செல்ல வேண்டும் லத்தீன்அமெரிக்கா செல்ல வேண்டும் என்று உண்டியல் குலுக்கியது மட்டும் என் கேடு கேட்ட நினைவில் வந்து தொலைக்கிறது.

ஜெயமோகனின் பயணங்கள் பற்றி ஒரு நான்கைந்து வருடங்களாக நாம் படித்து வருகிறோம். வடகிழக்கு நோக்கிய இரு பயணங்கள், அருகர்கள் சென்ற பாதையில், குகைகளை நோக்கிய ஒரு பயணம், அமெரிக்க பயணக் குறிப்புகள் , புல்வெளி தேசம் என்னும் தலைப்பில் ஆஸ்திரேலியப் பயணக் குறிப்புகள் என்று   அவை வெளியாகிவந்த காலகட்டத்தில் ஒவ்வொருநாளும் அந்த உடனடி நிகழ்வுகளை தன்னுடைய கூர்ந்த மொழிநடையில் ஜெ தன்னுடைய தளத்தில் வெளியிட்ட போது சுஜாதாவின் தொடர்கதைகளை பத்திரிகைகளில் ஒவ்வொரு வாரமும் காத்திருந்து படிப்பதைப் போன்ற உணர்வினைப் பெற்றேன். 

எத்தனையோ நாட்கள் கடுமையான அலைச்சலுக்குப் பிறகும் மின்னல் போல உடனுக்குடன் பதிவுகளை எழுதி சரியான புகைப்படங்களை இணைத்து பதிவேற்றம் செய்ய மிகுந்த ஈடுபாடு வேண்டும்.  இம்முறை கூட இமயத்தில் இணையத் தொடர்பு  வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே ஜெவால் உடனடிப் பதிவுகள் எழுத இயலாமல் போயிற்று .

அது போகட்டும், சாரு என்ன கூறுகிறார் ? ஜெ யின் கட்டுரைகள் விக்கிபீடியாவிலிருந்து மொழிபெயர்க்கப் பட்டது என்று. ஒரு நகரைப் பற்றிய தகவல்களுக்கு , வரலாறு பெயர்க்காரணம் போன்றவை குறித்து அறிவதற்கு விக்கிபீடியா பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
இன்று இந்தியாவில் இந்தியராகப் பிறந்தாலும் ஒரு தென்னமேரிக்கராகவே  வாழும் தென்னமேரிக்கர் போலவே "Espanol" அதாம்பா ஸ்பானிஷ் பேசும் சாருவிற்கு ( அதுசரி சாரு ஸ்பானிஷ் பேசி ஸ்பானிஷ் தெரிஞ்ச யாராவது கேட்டிருக்காங்களா?) வேண்டுமானால் எல்லா நகரங்களைப் பற்றிய வரலாற்றுப் பின்புலம் தெரிந்திருக்கலாம்.( ஒன்பது கிரகங்களும் நேர்கோட்டில் நிற்கும் ஜாதகம் உடைய ஒரு மனிதன்.! ). ஆனால் சாமானிய மனிதனாகிய ஜெ  வுக்கு விக்கிபீடியா உதவி செய்தது எவ்வளவு பெரிய தவறு?   முதல் வேலையாக விக்கி நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.


சாரு இப்படி என்றால் பிச்சைக்காரன் ஒரு படி மேலேயே போய்விட்டார் 

**///"அதாவது சாரு இமயமலை போனால் , அங்கு சாரு மறைந்து இமயமலையாகவே ஆகி விடுகிறார். ஜெமோ போனால் , அங்கு மலை இருப்பதில்லை...ஜெமோதான் இருப்பார்

இங்குள்ள சிலர் ஐரோப்போ சுற்றூலா செல்லுவார்கள். 10 நாட்களில் 12 நாடுகள் செல்வார்கள்
எப்படி அது முடிகிறது என தெரியவில்லை


ஜெ ஒரு விமானம் பிடித்து இமயமலையின் ஒரு பாதுகாப்பான இடதுக்கு போய் அமர்ந்து , இமயத்தின் வழியே என தான் படித்ததை எழுதுவார்
ஆனால் சாரு , இமயமலை வாழ்வை வாழ்ந்து விட்டு வந்து இருக்கிறார்

என்றாவது ஒரு நாவலில் அது வீரியத்துடன் வெளிவரும்.. அதாவது அவர் பயணம் , நம் ஒவ்வொருவரின் அனுபவம் ஆகி விடும்..ஆனால் ஜெமோவை பொருத்தவரை , மற்றவர்களின் அனுபவங்கள்தான் அவர் பயணமாக இருக்கும் "///**

சொற்றொடர்கள் ஒவ்வொன்றும் மணி முத்துக்கள். 
அது எப்படி ஜெயமோகன் பத்து நாட்கள் பயணம் சென்றால் அது வெறும் பயணம் . சாரு  நிவேதிதா சென்றால் அது வாழ்க்கை அனுபவம்.?
அது பயணமா இல்லை வாழ்க்கை அனுபவமா என்பது பயணம் செய்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். வெற்றுப் பகடி  "மட்டுமே" செய்யும் நமக்கு எப்படி தெரியும்? 

சாருவின் இமயமலைப் பயண அனுபவம்   என்றாவது ஒரு நாவலில் "வீரியத்துடன்" வெளிவரும் என்று பிச்சை சூளுரைக்கும்போதுதான் நமக்கு லேசாக கிலி பிடிக்கிறது. 
சாருவின் "வீரியத்தை" குப்பி கொடுத்தல் , குப்பி அடித்தல் என்னும் ரீதியிலேயே படித்துப் பழகிவிட்டதால் மேற்படி வாசகம் பீதியை ஏற்படுத்துவதில் வியப்பொன்றும் இல்லை. புனிதமான இமயமலை சாருவின் எழுத்தில் நல்லபடியாக வர சாருவின் ஞானகுரு எல்லாம் வல்ல நித்தியனந்தாவைப் பிரார்த்திக்கிறேன்.

Monday, December 31, 2012

சச்சின்

இந்தப் பதிவு சச்சினின் புள்ளி விபரங்களையோ  "On field Myths" கள் பற்றியோ அலசுவது அல்ல. மாறாக என்னுடைய கிரிக்கெட் நினைவுகள் சச்சினுடன் கூடவே தொடர்பானதாக உள்ளன. அவை பற்றிய சிறு பகிர்தலே இப்பதிவு.

கிரிக்கட் முதன் முதலில் எப்படி எனக்கு அறிமுகமாகியது என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறேன். எண்பதுகளின் இறுதியில் ஒவ்வொரு நடுத்தர வர்க்க வீடுகளிலும் கருப்புவெள்ளை அல்லது தவணை முறையில் வாங்கிய கலர் டிவிகள் அலங்கரிக்கத் தொடங்கிய காலம் அது. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஒரு காடும் காடும் காடு சார்ந்த ஊர் கீரிப்பாறை. மிக உயரத்தில் ஆண்டனா அமைத்தால் தான் திரையில் உடைத்த உளுந்துகளுடன் போனால் போகிறது என்று சற்றே படமும் தெரியும். 1991 அல்லது 1992 ஆக இருக்கலாம். எங்கள் வீட்டுக்கு மேலே சாத்தான்குளமோ சாத்தூரோ ஞாபகம் இல்லை ஒரு புதிய குடும்பம் வந்தது. அவர்கள் வீட்டில் ராஜா சுந்தர் என்று இரண்டு பள்ளிப் பருவத்தில் சிறுவர்கள்.ஒரு கோடைவிடுமுறையில் ஊரில் இருந்து வந்த தனது சொந்தக்கார சிறுவர்களுடன் ஒரு தெருவில் மூன்று குச்சிகளை நட்டு மரத்தை அறுத்து செய்த ஒரு மட்டையுடன் விளையாடக் களமிறங்கினர்.அதுவரையில் கிராமத்து விளையாட்டுக்களான சோறு பொங்கி விளையாடுதல் ,மற்றும் அக்காவின் நண்ப நண்பிகளுடன் சேர்ந்து கழங்கு அம்மனை சிற்றில் சிறுபறை சிறுதேர் இன்னபிற பிள்ளைத்தமிழ் விளையாட்டுக்கள் விளையாடிக்கொண்டிருந்த எங்களுக்கு அது ஒரு மிகப் பெரும் கலாச்சார அதிர்ச்சி. சற்றே ஆர்வம் மேலிட அந்த புதிய விளையாட்டை வேடிக்கை பார்த்தோம். மெதுவாக என்ன தம்பிங்களா ? விளையாட வர்றீங்களா ? என்று கேட்டனர். இந்த வ்ளாட்டு எங்களுக்கு தெரியாதுண்ணே என்றோம். சரி நாங்க சொல்லித்தர்றோம் கவலைப்படாதீங்க என்று சேர்த்துக் கொண்டனர். இவ்வாறாக அகில உலக கிரிக்கட் வரலாற்றில் மாபெரும் வீரர்களாக ஆகிவிடுவோம் என்னும் நம்பிக்கையில் பந்து பொறுக்கிப் போடும் சிறுவர்களாக அடியெடுத்து வைத்தோம்.



இப்படியாக கிரிக்கட்டுடன்னான எனது தொடர்பு உருவாகியது.அது மேலும் வளர்ந்தது அருப்புக்கோட்டையில். அங்கே 40 அடி உயர ஆண்டனா தேவைப்படவில்லை.எனவே தூர்தர்சனின் கிரிக்கட் ஒளிபரப்புக்களைக் காண ஆரம்பித்தோம். எனக்கு நினைவுதெரிந்து முதன் முதலில் இந்தியா நியுசிலாந்து 1993 அல்லது 1994 இல் தான் முதன் முதலில் நான் கிரிக்கட் டிவி இல் பார்த்தது. அப்போது சச்சின் யார் அசாருதீன் யார் காம்ப்ளி யார் என்பது போன்ற எந்த விவரமும் தெரியாது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக விளையாட ஆரம்பித்தவுடன்தான் விளையாட்டின் விதிகள் புரிய ஆரம்பித்தன. பின்பு நண்பர்கள் மூலமாக தெரிந்த இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் தான் சச்சின். அப்போது நவ்ஜோத் சித்து, அசாருதீன், காம்ப்ளி, மஞ்ச்ரேக்கர், ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், மனோஜ் பிரபாகர் போன்றோரும் சச்சினுடன் விளையாடிக்கொண்டிருந்தனர் . அன்றைய காலகட்டத்தில் சச்சின் என்பவர் இந்திய அணியின் பிரம்மாஸ்திரம். ஒட்டுமொத்த இந்திய அணியும் சச்சினின் ஆட்டத்தினை பொறுத்தே வெற்றியைப் பெற்றது. 1996 உலகக்கோப்பையில் அதிரடியாக ரன்குவித்த சச்சின் அதன்பின்பு தன்னுடைய பார்ம்மை 2011 உலகக்கோப்பை வரையிலுமே தக்கவைத்துக்கொண்டிருந்தார். 1996 உலகக்கோப்பைக்கு பின்பு யாராலுமே வெல்லமுடியாத அணியாக கோலோச்சிக் கொண்டிருந்தது இலங்கை அணி. அந்த காலகட்டத்தில் இந்தியாவுடன் விளையாடும் போது ஒரு 250 ரன்கள் எடுத்திருக்கும். பின்பு இந்தியா விளையாடும்போது துவக்க ஆட்டக்காரரான சச்சின் இருக்கும் வரையில் ரன்விகிதம் தேவையை விட அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் பந்து பவுண்டரி சிக்ஸர் என்று பறந்து கொண்டிருக்கும். பின்பு சமிந்தா வாஸ் ஒரே ஒரு பந்தை வைடாக போடுவார். தேவையில்லாமல் அதனைத் தொட்டு கீப்பர் கேட்ச் ஆக சச்சின் அவுட் ஆனதும் ரன்விகிதம் குறைந்து இந்தியா தோல்வியைத் தழுவும். இந்த நிலை இரண்டு வருடங்கள் தொடர்ந்தது.1998 இல் சச்சின் தனது கிரிக்கட் வாழ்வின் அதிகபட்ச பார்மில் இருந்த சமயம் இலங்கை அணியை வெற்றி பெற ஆரம்பித்தது. தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா போன்ற வலுவான நாடுகளையும் வெல்ல முடிந்தது. சச்சின் 50 ரன்களை 100 ரன்களாக மாற்றும் வித்தையில் நிபுணராகி உலகச்சாதனையும் படைத்தார்.


23 வருடங்கள் சச்சின் எப்படி தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்தார்? கால மாற்றத்திற்கேற்ப கிரிக்கெட்டின்  ஆட்ட விதிகளும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறின. முதல் பத்து ஓவர்கள் பவர் ப்ளே அப்புறம் பேட்டிங் பவர் ப்ளே பவுலிங் பவர் ப்ளே என்று ஆட்டம் விறுவிறுப்படைந்தபோது அதற்கேற்ப தனது ஆடும் முறையை அப்டேட் செய்து கொண்டார்.1998-1999 இல் இந்திய அணிக்கு மிகப்பெரும் எதிரியாக விளங்கியவர் நமது அணிக்குள்ளே இருந்த அஜித் அகார்கர். கிரிக்கெட்டின் கடையேழு வள்ளல்களில் ஒருவராக விளங்கிய அவர் ஒவ்வொரு போட்டியிலும் எதிரணிக்கு வாரிவழங்கிய 60-70 ரன்களையும் மீறி இந்தியா வெற்றி பெற முடிந்ததின் காரணம் சச்சின்தான். 1999 இல் உலகக்கோப்பை சமயம் தினமலரில் ஒவ்வொரு ஆட்டக்காரரின் தனிச்சிறப்பு வாய்ந்த ஷாட்களை அலசி ஆராந்து வரைபடங்கள் மூலம் விளக்கி ஒரு  பக்கம் வரும். அதில் சச்சினின் தனித்துவமான ஷாட்டான பிட்சில் இறங்கி வந்து நேராக ஒரு சிக்ஸர் அடிப்பாரே ஆது குறித்து விவரித்திருந்தனர். டோனி க்ரைக் Huge six Huge six என்ற, ஷார்ஜா  பாலைவனப் புயலில் ஷேன் வார்ன்னின் பந்துகளை பறக்கவிட்ட அதே ஷாட் தான். மைக்கேல் காஸ்பரோவிச் என்பவற்றின் கிரிக்கட் வாழ்வையே அஸ்தமிக்கச் செய்ததும் சச்சினின் அதே ருத்ரதாண்டவம் தான்.
பிற்காலத்தில் தனது முதுகு வலிக்கு காரணாமாக விளங்கியதும் அதுதான். பின்பு அதிலிருந்து மீண்டு வந்தாலும் அது போன்ற அக்ரஸிவ் அணுகுமுறை முற்றிலும் மறைந்து நிதானமான அதே சமயம் இலகுவாக விளையாடி ரன்களைக் குவித்ததும் அவரது தகவமைத்துக் கொள்ளும் திறனுக்குச் சான்று.எனினும் சச்சின் அவரது அக்ரஷனை 2003 உலகக் கோப்பையில் வெளிப்படுத்தி பாகிஸ்தானை சிதறடித்தபோது வந்துட்டார்யா பழைய சச்சின்  என்று துள்ளிக் குதித்தது என்றும் மறக்காது.

1999-2000 வரையில் அவரது அதிகபட்ச ரன்கள் 143 தான். அடுத்த 12 வருடங்களில் 186, 163, 175, 200 என்று பெரிய ஸ்கோர்களை குவித்தார். ஒருவிஷயம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அப்போது சச்சினுக்கு 35 வயதாகி விட்டிருந்தது. ஆனால் முன்னெப்போதை விடவும் நிபுணத்துவம் மிக்க ஷாட்களை ஆடிக்கொண்டிருந்தார். பேடில் ஸ்வீப், ஷட்டில் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என்பது போன்ற இந்திய ஆட்டக்காரர்கள் அதிகம் ஆடாத ஷாட் களையும் அவர் ஆடத்தவறியதில்லை. அதுபோக அப்பர் கட் ஹெலிகாப்டர் ஷாட் போன்ற ஷாட்களையும் இந்தியாவில் முதலில் ஆடியது அவர்தான். 


ஒருமுறை ஜெயமோகன் ஆந்திராவில் எதோ ஒரு குக்கிராமத்தில் மைக்கேல்  ஜாக்சன் படம் உள்ள டிஷர்ட்டை ஒரு சிறுவன் அணிந்திருந்ததும்  மைக்கேல் ஜாக்சன் குறித்து அவன் அறிந்திருந்ததும் வியப்பான ஒன்று என்று எழுதியிருந்தார். அதேபோலத்தான் சச்சினும், படிப்பறிவே இல்லாத எனது பாட்டி சச்சினைத் தெரிந்து வைத்திருந்ததும் வியப்பான ஒன்றுதான். சச்சின் ஆட்டமிழந்தால் சச்சின் அவுட்டா அப்போ இந்தியா அவ்ளோதான்   தோத்துடும் என்று என்னோடு சேர்ந்து என் பாட்டியும் நம்பியது உண்டு.  நாம் எப்போதுமே சச்சின் நன்றாக விளையாடி நிறைய ரன்கள் குவிக்கவே விரும்புவோம் எதிர்பார்ப்புகள் எப்போதும்  நிறைவேறும் என்பது சாத்தியமில்லை. ஆனாலும் சச்சின் நமது எதிர்பார்ப்பை பெரும்பாலும்  பூர்த்தி  செய்திருக்கிறார். 450 ஆட்டங்கள் ஆடி 45 ரன் விகிதம்  என்பது சாதாரண விஷயமில்லை. 1990 களின் மத்தியில் Bigfun  என்னும் சூயிங்கம் வாங்கும்போது கிரிக்கட் வீரர்களின் தகவல்கள் அடங்கிய கார்டுகள் கிடைக்கும்.அதிக ரன்கள் அதிக விக்கட்கள் அதிக ரன் விகிதம் போன்றவற்றை வைத்து  நீ பெரிதா நான் பெரிதா என்று விளையாடுவோம். தற்போது அந்த கார்டுகள் வந்தால் அதிகம் விரும்பப்படும் கார்டு சச்சினின் தகவல் அடங்கிய கார்டாக இருக்கும்.

இந்திய அணியை பொறுத்த வரையில் ஜாம்பவான்களின் ஒய்வு என்பது இனிய விஷயமாக இருந்ததில்லை. எனினும் சச்சின் விரும்பும்வரையில் விளையாடலாம் அன்று BCCI இத்தனை நாட்கள் கூறிவந்த நிலையில் சச்சினின் திடுதிப்பென்ற ஒய்வு முடிவு அதிர்ச்சிதான். ஜெயசூர்யாவை போன்று கடைசியாக ஒரு போட்டியில் விளையாடி ரசிகர்கள் மத்தியில் ஒரு Grand Exit சச்சின் பெற்றிருக்கலாம். சச்சினின் டெஸ்ட் கிரிக்கட் வாழ்வில் ஒரு இனிய அனுபவமாக ஒய்வு பெறும் வைபவம் நடைபெறும் என்றே நினைக்கிறேன்.


Sunday, August 19, 2012

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!


நான் துவக்கப் பள்ளியில் படித்த போது பள்ளி பாடப்புத்தகங்களில் கடைசி பக்கத்தின் பின்புறத்தில் எழுதியிருப்பார்கள் "இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்". இன்று புத்தகங்களில் அந்த வாசகம் காணாமல் போயிருக்கலாம். அதே போல இந்திய ஒருமைப்பாடும் காணாமல் போய்க்கொண்டிருப்பது  கண்கூடாகத் தெரிகிறது.இதற்கான காரணங்கள் பலவாக இருப்பினும் மிக மிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது  நமது இந்திய அரசியல் தலைமை.
பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியவுடன் வல்லரசு நாடுகள் னம் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தன. அந்த நேரத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை நாலாயிரம் ரூபாய்க்குப் பக்கத்தில். நாட்டின் உள்கட்டமைப்பு  வசதிகள் வலுப்பெறத்தொடங்கிய காலம் அது. 15 ஆண்டுகளாக இன்னமும் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பது ஜனநாயக அரசியலின் அளப்பரிய சாதனை.
இந்தியாவின் சிறப்பம்சமே வேற்றுமையில் ஒற்றுமை என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் நிகழ்வது அதற்கு தலைகீழாக இருக்கிறது. ஒரு  மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் இடையில் ஒற்றுமை என்பது மருந்துக்கும் கூட இல்லாத நிலைமை உள்ளது.நதிநீர் பங்கீடு முதல் வேற்று  மாநிலத்தோர் ஒரு மாநிலத்தில் பணிபுரிவது வரை இன்று ஒருமைப்பாடு சிறுமைப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. நீதியின் பக்கம் இருந்து அதனை சரியா செய்ய வேண்டிய மத்திய அரசோ ஓட்டுக்காக கையாலாகாத நிலையில் உள்ளது.


இலங்கையிலிருந்து அகதியாய் வந்த தமிழனுக்கு குடியுரிமையோ நல்ல வேலை வாய்ப்போ இந்தியாவில் கிடைப்பதில்லை. மாறாக வங்கதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இங்கே வாழ்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எனில் மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்பது இயல்புதானே?
வங்கதேச அகதிகள் மேல் அரசாங்கம் கைவைக்க முடியாது , ஏனென்றால் நமது மதச்சார்பின்மை கொள்கை என்னாவது ? 
எனவே எத்தனை இந்தியக் குடிமகன் கலவரங்களில் இறந்தாலும் பரவா இல்லை. இலங்கையிலிருந்து தமிழன் வருகிறானென்றால் உள்நாட்டுப் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது ஒரு காரணம். ஆனால் சின்ன பாகிஸ்தனாகிய வங்கதேசத்தில் இப்போது என்னதான் பிரச்சனை ? 1972 இலேயே  காசுவெட்டி பிரித்து விட்டது இந்தியாதானே ? கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்திடம்  தோற்றால் கூட பாக் கேப்டன் "எங்கள் சகோதரரிடம்தான் தோற்றோம் இது ஒன்றும் அவமானமில்லை" என்கிறான்.அப்புறம் என்ன மயித்துக்குடா பிரிஞ்சீங்க என்று இங்கு யாரும் கேட்க முடியாது, ஏனென்றால் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு.இன்றும் கூட கள்ளநோட்டுக்கள் ஆயுதங்கள் அதிகமும் இந்தியாவுக்கு வருவது பாகிஸ்தான்  மூலம் வங்கதேசம் வழியாகத்தான்.இப்போது கூட வங்கதேச அகதிகளை இந்திய அரசாங்கம் திரும்பிப் போக சொல்லட்டும் பார்ப்போம்?நமது பதிவுலகிலேயே  சுவானப் பிரியர்கள், அரேபிய  இஸ்லாமிய கனவு தேசத்தை இந்தியாவில் கட்டமைக்க போராடுபவர்கள் " சகோ சகோ" என்று தமிழ்மணத்தில் இந்தியா அரசாங்கத்தின் காவி பயங்கர வாதத்தையும் பாசிச வெறியையும் போட்டுத் தாக்கி பொளந்து விடுவார்கள்.

இந்திய என்பது பல தேசிய இனக்குழுக்கள் இணைந்த ஒரு தொகுப்பு. ஏதோ ஒரு தர்மத்திற்கு கட்டுப்பட்டு இன்னும் ஒரே நாடாகத் திகழ்வது மிகப்பெரும் அதிசயமே. அந்த கண்ணுக்குத்தெரியாத இணைப்பை உறுதிபடுத்த வேண்டியதுதான் மத்திய அரசாங்கத்தின் கடமை. கூட்டணி தர்மம் என்னும் நிர்பந்தத்தில் ஒருமைப்பாட்டினை சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலே எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊமையாய் இருப்பதற்குப்பதில் , இதுவரை அடித்த கொள்ளையோடு இவர்கள் ஒதுங்கிவிட்டு வேறு  ஒரு நல்ல தலைமை வர வழிவிட்டால் நன்றாக இருக்கும்.( பகல்கனவு )

எது எப்படியோ போய்க்கொண்டிருக்க நமது தமிழ்நாட்டிலோ மதச்சார்பின்மையானது சிறந்த அளவில் பேணிக் காக்கப்படுகிறது. எப்படியெனில் , கிருஸ்துமஸ் மற்றும் பிற இஸ்லாமியப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும்  முதுபெரும் கலைஞர் தீபாவளிக்கு மக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல மாட்டார். ஏனென்றால் இந்துக்கள் காட்டுமிராண்டிகள்.இந்துப் பண்டிகைகள் மூடநம்பிக்கைகள். ஆனால் பாருங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று மற்ற தொலைக்காட்சிகள் சிறப்புநிகழ்ச்சிகள் மூலம் காசு அள்ளிக்கொண்டிருக்கும் வேளையில் கலைஞரின் தொலைகாட்சி மட்டும் ஏன் வருமானம் இழக்கவேண்டும் ? விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் அங்கே மதச்சார்பின்மை பேணிக்காக்கப்படும் .ஆக பிள்ளையார் வேண்டாம் ஆனால் அவர் பிறந்த நாளில் விளம்பர வருமானம் வேண்டும். இந்த பிழைப்பிற்கு ஒரு நாலு பேரிடம் .............. வாங்கி ......... ஹ்ம்ம் இதை எப்படி என்கையால் எழுதுவது ? இவர்கள்தான் இந்திய ஒருமைப் பாட்டினைக் கட்டிக் காப்பாற்றும் மிகப்பெரிய தூண்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனை பாகிஸ்தானோ சீனாவோ இலங்கையோ அல்ல. மாறாக தான் ஒரு வல்லரசு என்னும் எண்ணமே இந்தியாவின் மிகப்பெரும் பிரச்சனை.  இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட குடிநீரோ , தரமான சாலை வசதியோ , தடையில்லா மின்சாரமோ அனைவருக்கும் கிடைப்பதில்லை.இவ்வளவு ஏன் நல்ல பொதுக் கழிப்பறை வசதிகள் நாட்டிலேயே கிடையாது எனினும் நம் வல்லரசு இந்தியாவோ தள்ளாடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த 10 பில்லியன் டாலர்கள் வழங்கப்போவதாகப்   படித்து மனம் அதிர்ந்தேன்.மேலும் தமிழ் நாட்டிலும் பிற மாநிலங்களிலும் கடுமையான  மின்வெட்டுப் பிரச்சனை நிலவி வரும்போது பாகிஸ்தானுக்கு 5000  மெகா வாட் மின்சாரம் வழங்கப்போவதாக திருவாளர் மன்மோகன் சிங் சில வாரங்களுக்கு முன்  மேலும் ஒரு அதிர்ச்சி அளித்தார். இந்தமாதிரி பெருமைக்குப் பி  தின்னும் போக்கினை நமது அரசாங்கம் என்று மாற்றுமோ தெரியவில்லை.

இப்போதுதான் 2G ஊழல் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி எனும் இலக்கினை நிர்ணயம் செய்து சிலவருடங்கள் ஆகவில்லை, வந்தாயிற்று சுரங்க ஊழல் முறைகேடுகள் ஒரு லட்சத்து எண்பத்து மூன்றாயிரம் கோடிகள். ஆஹா அருமை.
இந்தியாவில் நிகழும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு பற்றி எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. இவற்றிற்கு எதிராகப் போராடிய அண்ணா ஹசாரே வை   
ஊடகங்களே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டன. சோனியா மன்மோகன்சிங் , ப சிதம்பரம், சுரேஷ் கல்மாடி, சரத் பவார், நாராயண சாமி  போன்ற அப்பழுக்கில்லாத தலைவர்கள் இருக்கும்போது ஊழலாவது ஒன்றாவது ? அண்ணா ஹசாரே ஒரு விளம்பரப்பிரியர் என்றெல்லாம் எழுதிய  என்வழி போன்ற இணைய தளங்கள் தள்ளாத வயதிலும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அந்த விவசாயி ஹசாரே போராடுவது அவரை எதிர்க்கும் ஆட்களுக்கும் சேர்த்துதான் என்பதை புரிந்து கொள்ளவே இல்லை. 


காந்திய வழி நடப்பதாகக் கூறிக்கொள்ளும்  காங்கிரஸ் அரசு , காந்தியின் ஆயுதமான உண்ணாவிரதத்தை மயிருக்கும் சமானமாக மதிக்கவில்லை. இடிந்தகரையில் கூடங்குளம் அணுமின் நிலையத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திய வழியில் போராடிய மக்களை எக்கேடோ கேட்டு செத்துத் தொலையுங்கள் என்று கண்டு கொள்ளாமல் விட்ட தருணம் இந்தியாவில் ஜனநாயகம் என்ற விழுமியத்தின் இறுதி மூச்சினை நிப்பாட்டிய தருணம்.
மொத்த இந்திய ஊடகங்களும் ஆரம்ப கட்டப் பரபரப்புக்குப்பின் தற்போதைய நிலைமை என்ன ஏது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் செலுத்தவில்லை. 
தமிழக மக்களுக்கு கதிர்வீச்சினால் கல்பாக்கம் சுற்றியுள்ள கிராமங்களில் மரபணுக் குறைபாடுகள் அதிகமுள்ள குழந்தைகள் பிறப்பது பற்றிக் கவலையில்லை. நாளை நம்முடைய பிள்ளைகள் அவ்வாறு பிறக்கும் என்பதைப் பற்றிய கவலை இல்லை. நமக்கு இப்போதைக்கு வேண்டியது மின்சாரம் , கள்ள உறவினை சித்தரிக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் , ஐ பி எல் ,டாஸ்மாக்  மது.


கேரளாவிற்கு தன் மாநிலத்தில் அணுமின் நிலையம் வேண்டாம் ஆனால் கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வேண்டும். பிறமாநில செய்திகள் கூடங்குளம் மக்கள் போராட்டத்தை ஒரு மக்கள்விரோத போராட்டமாகவே பார்க்கின்றன. இப்படி மொழியால் , கலாச்சாரத்தால் இன்னும் பலவற்றாலும் வேறுபட்டுக் கிடக்கும் இந்தியா மேலும் மேலும் சீரழியும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. எனக்கு தேசப்பற்று ஒரு புண்ணாக்கும் கிடையாது.

இங்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்திருப்பதால் நான் கண்மூடித்தனமான  பிஜேபி ஆதரவாளர் என்று நினைக்க  வேண்டாம். அவர்களும் காங்கிரசுக்கு சளைத்தவர்கள் இல்லை. என்ன ஒன்று அவர்களுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பிலும் அடி பின்னி எடுத்து விட்டார்கள் (கர்நாடகா) ஆனால் காங்கிரசை விட சற்றேனும் மேம்பட்ட  அரசியல் நடத்துவார்கள் என்றே நம்புகிறேன் .இந்தியாவின் இன்றைய இழிநிலையைப் போக்க நமக்குத் தேவை ஒரு சர்தார் வல்லபாய் படேல். மீண்டும் ஒரு குஜராத்தி (மோடி) வந்தால் நிலைமை மேம்படும் என்று எண்ணுகிறேன்.

Friday, July 6, 2012

பில்லா 2 முன்னோட்டம் - சில பகிர்வுகள்

எல்லாருக்கும் வணக்கம். இது முழுக்க முழுக்க தல வழிபாட்டுப் பதிவு. படிச்சிட்டு கமன்ட் ல வந்து திட்ட நினைக்கிறவங்க (வேற யாரு டாக்டர் ரசிகர்கள் தான்) படிக்காமல் தவிர்ப்பது நலம். நன்றி.



சென்ற வருடம் மங்கத்தா யூ டியூபைக் கலக்கியது போல் இந்த வருடம் பில்லா 2 இன் டிரைலர்கள் கலக்கி எடுக்கின்றன. இந்தமுறை டிரைலரைப் பார்க்கும்போது  வசனங்கள் மிகுந்த கவனத்துடன் அஜித்துக்காகவே எழுதப்பட்டுள்ளன எனத் தோன்றுகிறது.
ஒரு காலத்தில் " நான் தனி ஆளு இல்ல " " அத்திப்பட்டினு ஒரு கிராமம் இருந்துது உங்களுக்கு தெரியுமா " என்று சீரியஸ் ஆகப் பேசி கிண்டலுக்குள்ளான காலங்கள் மலையேறிப் போயாச்சு. 

டிரயிலரில் அவர் பேசும் வசனங்கள் அவருடைய சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பதைப் போலவே உள்ளன. என்னோட  வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும்  ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினது டா , கண்டிப்பாக சுயமாக செதுக்கிய வாழ்க்கைதான் அவருடையது.
மேலும் "எனக்கு நண்பனா இருக்க எந்த தகுதியும் தேவை இல்ல , ஆனா எதிரியா இருக்க கண்டிப்பா தகுதி வேணும் என்னும் வசனத்தைக் கேட்கும்போது  ஒரு காலத்தில் அவருடைய திரைப் போட்டியாளராக கருதப்பட்ட ஒரு நடிகர் தற்காலத்தில் தனது படங்கள் மொக்கை வாங்குவதால் அரசியலுக்கு செல்ல முயன்று அங்கேயும் மொக்கை வாங்கி , ஆளும் கட்சிகளுக்கு மாற்றி மாற்றி சொம்படித்து காலத்தை ஒட்டி தற்போது பிறந்தநாளுக்கு குழந்தைகளுக்கு மோதிரம் போடுகிறேன் என்று மருத்துவமனைக்குப் போய் கலாட்டா உண்டு பண்ணி அங்கேயும் பல்பு வாங்கி எப்படியாவது விளம்பரம் கிடைக்காதா என்று தரை லெவலுக்கு இறங்கி தன்னுடைய தகுதியை தாழ்த்திக் கொண்டே செல்வது ஞாபகம் வருகிறது.
(ஒரு காலத்தில் அவர் ரசிகர்கள் ஆடிய ஆட்டமென்ன ? தற்போது அவர்கள் நடந்த பிள்ளை தவழுதடி .. நான் செய்த பாவமடி என்று வருத்தத்தில் உள்ளனர்.)
சமூகத்தில் மரியாதை என்பது தானாக வரவேண்டும். பிறருடன் பண்புடன் நடந்துகொண்டாலே தானாக வரும். இன்னும் சுயவிளம்பரங்கள் மூலமாக புகழ் மற்றும் மரியாதை பெற நினைத்தால் கூடிய விரைவில் பவர் ஸ்டாருக்கு போட்டியாகும் வாய்ப்புள்ளது. 
இன்று திரைத்துறையில் அஜித்துக்கு இருக்கும்  மரியாதை பற்றி இங்கு எழுதவே தேவை இல்லை. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு , தலையா ..? அவரு கிரேட்டுப்பா என்று கூறுபவர்களே அதிகம்.
இந்த மரியாதை எதனால் சாத்தியமாயிற்று? வயது கூடிவருவதனால் வந்த பக்குவம் ஒரு காரணமாக இருக்கலாம். நடிக்கும் படங்களில் தன்னுடைய வேலையைத் தவிர்த்து பிற விஷயங்களில் தலையிடாததும், அனைவரிடமும் சகஜமாகப் பழகுவதும் காரணமாக இருக்கலாம்.
எது எப்படியோ இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் அவருக்கு இருக்கும் வரவேற்பும் , ரசிகர் மன்றங்களைக் கலைத்த பிறகும் எகிறும் ரசிகர்கள் எண்ணிக்கையும் எல்லாவற்றிற்கும் மேலாக அவருக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களும் பெரும் ஆச்சரியமே.
அஜித்துக்கு ரஜினியைப் போலவோ கமலைப் போலவோ இவ்வளவு ஏன் டாக்டர் விஜய் போலவோ இந்திய அளவில் பரந்த சந்தை மதிப்பு கிடையாது.  (டாக்டரின் படங்கள் கேரளாவில் வரவேற்பினைப் பெறுகின்றன. முல்லைப் பெரியாரில் தண்ணீர் தராத மலையாளிகளுக்கு தமிழன் தரப்பிலிருந்து வழங்கப் படும் மிகப் பெரிய தண்டனை டாக்டரின் படங்கள் என்பது என் எண்ணம்.) தான் படங்களை விநியோகம் செய்கிறார்கள் எனும் ஒரே காரணத்திற்காக சன் மியூசிக்கிலோ இசையருவியிலோ வந்து வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி என்று கூப்பாடு போடுவதும் கிடையாது. பிஹைண்ட் உட்ஸ் போன்ற இணைய தளங்களும் அஜித்தின் படங்களின் உண்மையான சந்தை நிலவரத்தை இருட்டடிப்பு செய்கின்றன.
விகடன் விமர்சனமும் போனால் போகிறது என்று 40 மதிப்பெண்கள் மட்டும் கொடுக்கும். போதாக்குறைக்கு டாக்டரின் ஆதரவாளர்கள் இணைய தளத்தில் கிழித்துத் தொங்கவிட்டு விமர்சனம் எழுதுவார்கள்.எனினும் அஜித் படங்களின் வசூல் நிலைவரமானது ரஜினி கமலுக்கு அடுத்தபடியாகவே இருக்கின்றன.  

எந்த விளம்பரமும் இல்லாமல் மிகக் காலதாமதமாக வெளியான வரலாறு வெகுநாட்கள்  தமிழ் சினிமாவின் அதிக வசூல் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தது . பில்லா பற்றி நான் கூறவே தேவை இல்லை. மங்காத்தா ரிலீஸ் ஆகுமோ ஆகாதோ என்னும் நிலையில் மிகக் குறுகிய நாட்களே சன் டிவியால் விளம்பரம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு அதிக வசூலைக் குவித்தது. சன் டிவி எல்லா படங்களையுமே மாபெரும் வெற்றி என்று சொல்லும் என்பவர்களுக்கு சுறா, வேட்டைக்காரன், குருவி போன்ற படங்களை நியாபகப் படுத்த விரும்புகிறேன்.

சரி மீண்டும் பில்லா 2 ற்கு வருவோம். மிகச் சிறப்பான ஆக்ஷன் காட்சிகள் அமையப்பெற்றுள்ளதாகத் தோன்றுகிறது. குறிப்பாக ஹெலிகாப்டரிலிருந்து ஒற்றைக் கையில் தொங்கும் காட்சி மயிர்க் கூச்செறியச் செய்கின்றது. 
என்னதான் முன்னெச்சரிக்கை உபாயங்கள் கையாளப் பெற்றிருந்தாலும் தல இத்தகைய ஆபத்து நிறைந்த காட்ச்களில் நடிக்க வேண்டாம் என்பது என் விருப்பம். ஒரு காலத்தில் ஒரு நடிகர் ஒரு ஏணி மூலமாக ஒரு பால்கனியிலிருந்து இன்னொரு பால்கனிக்கு தாவுவார். உடனே இந்த காட்சியில்  டூப் போடாமல் நடித்தது உங்கள் டாக்டர் என்று வெட்கமில்லாமல் திரையில் ஒரு சுய விளம்பரம் வேறு. குருதிப் புனலில் கமல் ஒரு ஓடும் ரயிலை தண்டவாளத்தில் குறுக்காகத் தாண்டுவார். அது ஒரே ஒருமுறை மாத்திரம் திரையில் காண்பிக்கப்படும். ஆனால் டாக்டரோ ஏணி மூல தாண்டுவதை பல   ஆங்கிள்களில் படம்பிடித்து திரும்பத் திரும்ப நான்கு முறை காட்டுவார். ஜாக்கி சான் கூட இப்படி விளம்பரம் செய்ய மாட்டார்.



தல வெறுமனே திரையில் வந்தால் மட்டும் போதும். அவருடைய ஸ்கிரீன் ப்ரசென்ஸ் ஒன்று மட்டுமே மொத்த திரைப் படத்தையும் தாங்கி நிற்கும்.
சும்மா கதை  விடாதீங்க என்பவர்களுக்கு பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் உதாரணம். கமலுக்கு அடுத்தபடியாக என்ன உடை அணிந்தாலும் , எந்த வித சிகை அலங்காரத்திலும்  சிறப்பாக தோன்றுவது தல தான். மங்கத்தா நரைமுடி தோற்றத்திலேயே அசத்திய தைரியம் யாருக்கும் வராது. டாக்டரின் ப்ளாண்ட் ஹேர் ஸ்டையிலை பார்க்கும் தைரியம் யாருக்கும் வராது.. 



எதற்கெடுத்தாலும் கோட் அணித்ந்து கொண்டு கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு சும்மா அங்கேயும் இங்கேயும் நடக்கிறார் என்று தலையைப் பற்றிக் கூறுபவர்களுக்கு ஒரு கேள்வி. ஒரு ஹை ப்ரோபைல் டான் படத்தின் ஆம்பியன்சிற்கேற்ப பாந்தமாக கோட்  ஸ்யூட் அணிந்து வந்தது நன்றாக இருந்ததனால்தானே பில்லா வெற்றிபெற்றது? மாறாக மொட்டை வெயிலில் சிகப்பு நிற லெதர் கோட் போட்டுக் கொண்டு இடுப்பில் கை வைத்துக் கொண்டே சேரிப் பகுதிகளில் வீரமாக தொண்டரடிப்பொடிகள் சூழ டாக்டர் நடந்து வந்த சுறாவோ வேட்டைக்காரனோ என்ன ஆயிற்று?



எது எப்படியோ பில்லா  2 வெற்றி பெறுகிறதோ இல்லையோ தல ரசிகர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமே இல்லை. உட்றா உட்றா சூனா பானா என்று அடுத்த படத்திற்கு தயாராகிவிடுவோம். இதே மாதிரி தல ஆராதனைப் பதிவுகள் எழுதிக்கொண்டேதான் இருப்போம்.

Friday, May 4, 2012

தமிழ் சினிமாவின் புதிய தளபதி


சமீபத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் பார்த்தேன்.தமிழ் சினிமாவின் புதிய நடிப்பு புயல் நடன சூறாவளி, நவயுக நாயகன், வெகு விரைவில் சூப்பர் ஸ்டார் ஆக்கப்படப் போகும் தகுதியுடைய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் மெய்மறந்தேன்.
படத்தில் டிராபிக் சிக்னலில் ஒரு பெண்ணை பார்க்கிறார். அவள் தன்னுடைய முகத்திரையை விலக்கியதும் ஐயோ அம்மா என்று கவுண்டமணி ரீதியில் அந்தப் பெண்ணை காரி உமிழ்ந்து இகழ்கிறார். நியாயமாகப் பார்த்தால் அந்தப் பெண்தான் இவரை உமிழ்ந்திருக்க வேண்டும்.என்ன செய்வது கோடிகளாய்க் குவித்த ஊழல் பணத்தில் ஒரே நாளில் நாயகனாகிவிட்டாரே. நாயகன் மீது உமிழ முடியுமா ?

ஜீவா நடித்திருந்திக்க வேண்டிய படம் இது. படத்தின் வெற்றியின் அளவைக் குறைத்ததில் நாயகனின் பங்கு மிகப் பெரிது.சந்தானம் தனியொரு ஆளாக படத்தைத் தாங்குகிறார். சந்தானம் மட்டும் இல்லை என்றால் வெறும் குப்பை என மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கும். என்னதான் சந்தானம் இருந்தாலும் கடைசி 20 நிமிடங்கள் திக்கித் திணறி தண்ணீர் குடித்து இயக்குனர் ஒப்பேற்றி இருப்பது சலிப்பை அளிக்கிறது.

நடிப்பு, நடனம், நகைச்சுவை என அனைத்தையும் திறம்படச் செய்ய முயன்று தோற்கிறார் ஹீரோ. சந்தானம் வசனம் பேசும்போது ஹீரோ கொடுக்கும் பார்வை ரியாக்ஷன்கள் படுபரிதாபம். பேசாமல் அப்போதும் கூலிங் கிளாஸ் போட்டிருந்திருக்கலாம்.நிறைய இடங்களில் SMS ஜீவாவை இமிடேட் செய்ய முயன்று எரிச்சலூட்டுகிறார்.


படம் முழுக்க தப்பு தப்பாக இங்கிலீஷ் பேசுவதாக நடிக்க முயற்சிக்கிறார் , கொஞ்சம் கூட சிரிப்பே வரவில்லை. படம் முடிய கால்மணி நேரம் இருக்கும்போது ஹீரோ சரியாக இங்கிலீஷில் பேசுகிறார்.ஏன் இங்கிலீஷ் தெரியாதது மாதிரி நடிக்க வேண்டும் என்று ஒன்றும் புரியவில்லை. தமிழ் நாட்டின் கஷ்டகாலம், புதிய தளபதியின் அடுத்தடுத்த படங்களை பெரிய பெரிய இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்பில் இனி வருடம்தோறும் காணலாம். இதனால் இளைய தளபதி கடுமையான பீதியில் இருப்பதாகக் கேள்வி. கவலைப் படவேண்டாம் நடனத்தில் உங்களை யாராலும் மிஞ்ச முடியாது.என்ன ஒன்று கஷ்டமான ஸ்டெப்புகளை ஆடுகிறேன் என்று சுறா படத்தில் செய்தது போல தரையில் படுத்து உருளாமல் இருந்தால் போதும். இல்லாவிட்டால் மக்கள் புதிய தளபதியின் பாக்கியராஜ் நடனமே பரவா இல்லை என்னும் முடிவெடுக்கும் சாத்தியம் உள்ளது.

நமது ஹீரோவின் நடனம் குறித்து யுவகிருஷ்ணா தனது விமர்சனத்தில் குறிப்பிடும்போது நடிக்க வந்து இத்தனை வருடங்களாகியும் அஜித்துக்கே நடனம் வரவில்லை என்று கூறுகிறார். வரலாறு படம் பார்க்கவில்லை போலும். தன்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டால் அப்படத்தில் அஜித் நன்றாகவே ஆடியிருப்பார் . சரி அத்தனை குறைகளை மீறியும் அஜித்தை நமக்கு ஏன் பிடிக்கிறது என்றால் ஊரை விற்ற ஊழல் பணத்தில் சொந்தப் படம் எடுத்து ஹீரோவாக அறிமுகம் ஆகவில்லை. எந்தத் திறமையும் இல்லாமல் அறிமுகம் ஆகி 20 வருடங்களில் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தினை பெறுவது எளிதான காரியம் அல்ல.


கன்னட சினிமாவில் எப்படி புனீத் ராஜ்குமார் வலுக்கட்டாயமாக ஹீரோ ஆக்கப்பட்டு ஒரு நட்சத்திரம் ஆக்கப்பட்டரோ அதே போன்ற நிலைமை தமிழ் நாட்டிலும் பிரகாசமாக தெரிகிறது. நாட்டில் நடக்கும் கொடுமைகளை மறக்க திரையரங்குக்கு சென்றால் அங்கேயும் ஊழல்வாதிகளின் வாரிசுகள் ஊழல் பணத்தில் ஆடிகொண்டிருந்தால் மக்கள் என்னதான் செய்வது ? நேற்று அருள்நிதி, இன்று உதயநிதி, நாளை தயாநிதி. ஆளுக்கு மூன்று படங்கள் வருடத்திற்கு நடித்தாலும் ஒன்பது படங்கள், சன் டிவி, கலைஞர் டிவி, கே டிவி என அனைத்திலும் அந்த ஒன்பது படங்களின் ட்ரைலர் மாறி மாறி ஓடி மக்களை இம்சிக்குமே? 

ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆனவுடன் சன் மியூசிக், இசையருவி என சிறப்பு நிகழ்சிகள் போட்டு தாரை தப்பட்டைகளை அடித்துக் கிழித்து தொங்கவிடுவார்களே. தமிழ்நாட்டு மக்களின் நிலைமை கவலைக்கிடம்தான் இனி. மணிரத்னம், கவுதம் மேனன், செல்வராகவன், கே வி ஆனந்த் , AR முருகதாஸ், KS ரவிக்குமார் போன்ற முன்னணி இயக்குனர்கள் இனி தெலுங்கு, ஹிந்தி படங்களை மட்டும் எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிடில் தங்களுடன் படம் பண்ண சொல்லி நிதிகள் "செல்லமாக" அழைக்கும் போது தலைவலி வயிற்று வலி , வாந்தி பேதி என்று கூறி எஸ்கேப் ஆகிவிடவும். தமிழ்நாட்டுக்கு புண்ணியமாகப் போகும்.

ஆனால் பாருங்கள் பதிவுலகில் சினிமாவை லட்சியமாகக் கொண்டு, எழுத்தை தவமாக கொண்ட சொம்படிக்கும் பதிவர்கள் யுவகிருஷ்ணா ,ஜாக்கி சேகர் போன்றவர்களுக்கு அடித்தது யோகம்.ஏற்கனவே பரசுராம் 55 மூலம் யு டியூபை கலங்கடித்தாயிற்று. வெள்ளித் திரையையும் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம். இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம், தங்கள் விமர்சனங்களில் புதிய தளபதியை புகழ்ந்து தள்ளியிருப்பதைப் பார்த்தால் அது நிஜமாகவே வாய்ப்பிருக்கிறது.

தமிழ்நாட்டை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

Thursday, May 3, 2012

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு என் அனுபவம்-7

இதுநாள் வரை இயந்திரப் பொறியியல் துறையில் Design Engineer குறித்து சில விஷயங்களைப் பார்த்தோம்.இந்த பதிவில் வேலை வாய்ப்பு பற்றி பார்ப்போம்.இன்றைய கால கட்டத்தில் ஒரு இயந்திரப் பொறியியல் மாணவர் வேலை வாய்ப்பு குறித்து கவலைப்படத் தேவை இல்லை.உலகெங்கிலும் வாய்ப்புகள் பரவிக்கிடக்கின்றன.திரைகடலோடியும் திரவியம் தேடும் தில் இருந்தால் போதும். ஆப்பிரிக்க நாடுகளில் ஆசிரியர் வேலைகள், மத்திய கிழக்கு , அரேபிய தீபகற்பத்தில் Refrigeration and Air conditioning , Heavy Fabrication and erection  மற்றும் செங்கோவி அண்ணன் பணிபுரியும் குழாயில் துறை Pipinig என எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. இதுபோக வடிவமைப்பு Design துறையில் பல நாடுகளிலும் சென்று பணிபுரியலாம்.


ஒரு இயந்திரப் பொறியியல் வல்லுனரால் கணினித் துறையில் மென்பொருள் வடிவமைப்பாளராகிவிட முடியும். என்னுடன் படித்த நிறைய நண்பர்கள் இன்று தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிகின்றனர். (நமக்கு இந்த C,C++, எல்லாம் வேலைக்காகவில்லை).Main Frame technology என்ற  தொழில்நுட்பம் கற்று IBM போன்ற நிறுவனங்களில் நுழைந்தவர்கள் அதிகம்.
என்னதான் இருந்தாலும் கல்வி கற்ற துறையிலேயே வேலை பார்ப்பது என்பது அலாதி அனுபவம்.ஒரு டிசைன் எஞ்சினியர் சாகும் வரையில் டிசைன் எஞ்சிநியராகவே இருக்க விரும்புவான்.அந்த உணர்வை இங்கே வார்த்தைகளில் எழுத முடியாது. அது உணரப்பட வேண்டிய ஒன்று.

தொடரின் துவக்கத்தில் கூறியது போல படிக்கும் போது arrears இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டியது முக்கியம். GE போன்ற நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்க சில அடிப்படைத் தகுதிகளில் அதுவும் ஒன்று. சில நிறுவனங்கள் அதிகபட்சம் இரண்டு arrears மட்டும் ஏற்றுக்கொள்ளும்.

அரசுப்பணிகளில் ரயில்வே , IES Indian Engineering Service, மற்றும் பல UPSC Union public service Comission, ISRO, DRDO, மற்றும் பல போட்டித் தேர்வுகள் எழுதலாம்.இதுபற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

கல்லூரியில் படிக்கும் போதே உங்கள் விருப்பம் எந்தப் பிரிவில் என்று தெரிந்து கொண்டால் அது தொடர்பான திறன்களை மேம்படுத்திக் கொண்டால் வேலை வாய்ப்பு மிக எளிதாகக் கிடைக்கும். சிலருக்கு வாகனம் தொடர்பாக ஆர்வமிருக்கும், அவர்கள் Thermodynamics, thermal Engineering , Automobile, போன்ற பாடங்களின் அடிப்படைகளை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.

சிலருக்கு Refrigeration and Air conditioning துறையில் ஆர்வமிருக்கும். அவர்கள் Thermodynamics, thermal Engineering, Heat and Mass Transfer போன்ற பாடங்களில் நல்ல தேர்ச்சி இருக்கவேண்டும்.

இதுபோக இயந்திரப் பொறியியல் துறையின் எந்தப் பிரிவுக்கு வேலைக்கு செல்லவேணடுமென்றாலும் "Engineering  drawing, Engineering Mechanics, Strength of materials" போன்ற பாடங்களின் அடிப்படைகள் தெரிந்திருக்க  வேண்டும்.

நான் சொல்வது மிகவும் அடிப்படையான விஷயங்கள் தெரிந்திருந்தால் போதும் என்பதே. படித்த அனைத்தையும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. எனவே நேர்முகத்தேர்வில் உங்களிடம் கேள்வி கேட்பவர்கள் எதிர்பார்ப்பது உங்களுக்கு அடிப்படை அறிவு அனைத்து பாடப் பிரிவுகளிலும் உள்ளதா என்பதே. அதனை சமாளித்து விட்டால் போதும்.வேலையை பெற்றுவிடலாம்.

இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் கோலோச்சும் அனைத்து பெரிய நிறுவனங்களும் , இயந்திரப் பொறியியல் டிசைன் துறையில் கால்பதித்துள்ளன.Infosys , CTS, TCS, Wipro  என அனைத்து பெரிய நிறுவனங்களும் வாகன உற்பத்தி, விமானம், கனரக இயந்திரங்கள் போன்ற அனைத்து துறைக்கும் டிசைன்   சேவையை அளிக்கின்றன.இவை போன்ற நிறுவனங்கள் "Service Providers". 

இதுபோக OEM (Original Equipment Manufacturer என்ற வகையில் நிறுவனங்களின் design center கள் இந்தியாவில் நிறைய உள்ளன. அதாவது மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய டிசைன் சென்டர்களை இந்தியாவில் நிறுவியுள்ளன.இது TCS,Infosys,Wipro போல அன்று. TCS போன்ற நிறுவனங்கள் பல நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யும். ஆனால் OEM தனக்கான தேவையை தன்னுடைய  design center கள் மூலமாக பெற்றுக்கொள்ளும்.

ஒரு டிசைன் என்ஜினியர் ஆவதற்கு அடிப்படைத் தகுதி பாடங்களில் அடிப்படைகளில் பலமாக இருத்தல் மற்றும் ஏதேனும் ஒரு 3D CAD Modelling Software அறிந்து வைத்திருப்பது.இன்றைய சூழ்நிலையில் பெருவாரியான நிறுவனங்கள் PRO-E என்னும் சாப்ட்வேர் உபயோகிக்கின்றன.
இதுபோக Catia,Unigraphics, Solidworks  என பல மென்பொருட்கள் உள்ளன.

Robert Bosch  போன்ற நிறுவனங்கள் "Internship" "Apprenticeship" தகுதித் தேர்வுகள் நடத்தி பயிற்சி அளிக்கின்றன.இவைகள் மூலமாகவும் வேலைவாய்ப்பினைப் பெறலாம்.

Central Institute of Plastic Engineering & Technology (CIPET) இல் பட்டயப் படிப்புகள் படிப்பவர்களுக்கு பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வடிவமைக்கும் நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

Atlantis lab போன்ற சில நிறுவனங்கள் PRO E  பயிற்சியும் அளித்து வேலை வாய்ப்பு பெறவும் உதவுகின்றன. ஆனால் கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம்.

ஒரு வழியாக ஒரு வேலை கிடைத்தாயிற்று. எப்போதும் நமக்கு வழங்கப்படும் முதல் ப்ராஜக்ட் சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும், முடிவு எப்படி இருந்தாலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் முக்கியம். நிர்வாகம் நம்முடைய ஆளுமையை நாம் எடுக்கும் முயற்சிகளைக் கொண்டே கணிக்கும். 21 அல்லது 22 வயதில் கல்லூரியை முடித்து வந்திருப்போம்.விளையாட்டு மனப்பான்மை முற்றிலும் அகலாத பருவம்  இது. விளையாட்டுத் தனமாக பணியில் இருந்தாலும் சிறப்பாக வேலையை முடித்தால் பிரச்சனை இல்லை.ஆனால் வெறும் விளையாட்டு பணி உயர்வினையும் சம்பள உயர்வினையும் பாதிக்கும்.எனவே கவனம் தேவை.


இதுநாள் வரையில் நான் இங்கு பகிர்ந்து கொண்டது பெரிதும் என்னுடைய அனுபவங்களே. இதில் நான் பகிந்து கொண்டவை முற்றிலும் சரியானது என்பது என் வாதமல்ல.நான் கூறியவற்றில் தவறுகள் இருக்கலாம். இதில் நான் தெரிந்து கொள்ளத் தவறியவை , அடி வாங்கி கற்றுக் கொண்டவை போன்றவற்றைப் பகிந்துள்ளேன்.என்றாவது ஒருநாள் யாருக்காவது ஒருவகையில் பயன்படும் என்கின்ற நம்பிக்கையில்.

வாழ்த்துக்களுடன்

Tuesday, April 24, 2012

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு என் அனுபவம்-6

கடந்த பதிவுகளில் ஓரளவிற்கு "design" பற்றி பார்த்துவிட்டோம். இந்த பதிவில் "Product Development Cycle" பற்றி பார்ப்போம்.எந்த ஒரு பொருளும் கருத்து வடிவிலிருந்து (idea) பொருளாக (product) மாறுவதற்கு சில இடைநிலைகள் உண்டு. இது எந்த ஒரு பொருளுக்கும் பொருந்தும்.
இதனை "Product Development cycle" பொருள் வளர்நிலை சுழல் எனலாம். (இன்னும் மேலான தமிழாக்கம் தெரிந்தால் கூறவும்)

Conceptualization -->  Conversion -->  Production Evaluation & Testing --> Product Release
கருத்துருவாக்கம்--கருத்து உருமாற்றம்--மதிப்பீடு செய்தல்--சந்தைப்படுத்துதல் 

முதல் நிலையை "Conceptualization" - கருத்துருவாக்கம் எனலாம். 

இதில் சில இடைநிலைகள் உள்ளன.
Opportunity Identification    குறிப்பிட்ட பொருளுக்கான தேவையைக் கண்டறிதல் 
Idea Generation                 பொருளுக்கான கருத்து வடிவினை உருவாக்குதல்  
Idea Selection                    சிறந்த கருத்து வடிவினைத் தேர்ந்தெடுத்தல்
Conceptualization              அதனை கருத்துரு வாக மாற்றுதல்
Concept Evaluation           கருத்துருவை மதிப்பீடு செய்தல்

இந்நிலைகள் அனைத்தும் ஒரு பொறியாளரால் மட்டுமே செய்யப்படுவதில்லை. "Opportunity Identification" னுக்கு Marketting  துறையின் உதவி தேவைப்படும்.மற்ற நிலைகளுக்கு அனைத்து துறைகளிலிருந்தும் நிபுணர்களால் (Subject Matter Experts)  உள்ளீடுகள் (Inputs) அளிக்கப்படும்.
இவ்வாறு ஒவ்வொரு கருத்துருவும் மெருகேற்றப்பட்டு அதில் சிறந்த ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அது அடுத்த நிலைகளுக்கு முன்னேறும்.

அடுத்த நிலை தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துருவை பொருள் வடிவமாக மாற்றுதல் - Conversion 

ஒரு டிசைன் எஞ்சினியரின் பணி கருத்துருவாக்க நிலையிலிருந்தே துவங்கி விடுகிறது. இந்த Conversion நிலையில் இன்னும் அதிகமான உழைப்பு டிசைன் என்ஜினியருக்குத்தான். concept ஐ தயாரிப்பிற்கு ஏற்ற வகையில் ஒரு 3D CAD மென்பொருள் மூலம் வடிவமைப்பதும் வரைபடங்கள் தயார் செய்வதும் டிசைன் எஞ்சினியரின் பணி.இடையில் ஏதேனும் மெருகூட்டும் எண்ணம் தோன்றினால் நிபுணர்களிடம் கலந்தாய்வு செய்துவிட்டு தேவைப்படும் மாற்றங்களை செய்யலாம்.
பின்பு வரைபடங்கள் ஒரு Manufacturing அல்லது Production எஞ்சினியர் துணையுடன் தயாரிப்பிற்கு ஏற்ற வகையில் உள்ளனவா என்று மதிப்பீடு செய்யப்பட்டு தயாரிப்பிற்காக அனுமதிக்கப்படுகின்றன. (Production Release).

அடுத்த நிலையானது Production Evaluation & Testing: தயாரித்த பொருளை மதிப்பீடு செய்தல்.

தயாரிக்கப்பட்ட பொருளானது முறையாக இயங்குகிறதா , சரியான தரத்தில் தயரிக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்யப்பட்ட பிறகே சந்தையில் விற்பனைக்கு வரும். தீபாவளி பண்டிகைக்கு ஒரு புதிய பொருள் விற்பனைக்கு வருகிறது என்றால் குறைந்தது நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்பே  அப்பொருளினைத் தயாரித்து விடுவார்கள். பின்பு சோதனைச் சாலையில் அதனை பல்வேறு சூழ்நிலைகளில் இயக்கி பரிசோதிப்பார்கள். இதனை "Accelerated Life test" " Endurance test" என்பர்.பின்பு சில  பொருட்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு ஓரிரு மாதங்கள் அவர்கள் அதனை பயன்படுத்தி , பின்பு அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் , புதிதாக தயாரிக்கப் போகும் பொருட்களில் நிவர்த்தி செய்வார்கள். பின்பு அவை சந்தைக்கு அனுப்ப தயாராகும்.
இவ்வாறு  குறைகளைக் கண்டறிதல்அதனை குறிப்பிட்ட பொறியாளருக்கு , துறைக்கு அறிவித்தல்  தரக்கட்டுப்பாட்டுத் துறையின் (Quality Department) பணியாகும். 

அடுத்த நிலையானது தயாரிக்கப்பட்ட பொருளை சந்தைப்படுத்துதல் (Product Release)

இதில் Marketting Department,மற்றும்  Logistics department  முக்கிய பங்கு வகிக்கின்றன.
Marketing Department 
தயாரிக்கப்பட்ட பொருள் பற்றிய செய்திகள் மக்களைச் சென்றடையும் விதத்தில் விளம்பரப் படுத்துதல் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து பொருட்களில் தேவையான மாறுதல்கள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தல் போன்றவை marketting துறையின் பணியாகும்.
Logistics ( Material management)  - பொருள் நிர்வாகம் 
தேவையான பொருள் சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருப்பதை உறுதி செய்வது லாஜிஸ்டிக் துறையின் பொறுப்பு. தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருளானது உலகமெங்கிலும் உள்ள நாடுகளுக்கு, நகரங்களுக்கு தரை வழியாகவோ , கடல்வழியாகவோ வான்வழியாகவோ  சென்று சேர்ப்பது  இவர்கள் வேலை.

இவ்வாறு உள்ள நிலைகளில் ஒவ்வொரு நிலையின் இறுதியிலும் அனைத்து துறைகளையும்  சேர்ந்த நிபுணர்களின் கலந்தாய்வுக் கூட்டம் (Technical Reviews)நிகழும். இதனை சில நிறுவனங்கள் toll gate என்று அழைக்கின்றன, சில நிறுவனங்கள் gateway என்று அழைக்கின்றன ஒவ்வொரு நிலையிலும் ஏதேனும் குறைகளைக் கண்டால் நிவர்த்தி செய்ய முந்தைய நிலைக்கு பரிந்துரைப்பது இக்குழுவின் பொறுப்பு.
இவ்வாறு தரமான பொருள் உருவாகுவதை உறுதி செய்கின்றனர்.இத்தகைய Reviews பொருளில் கடைசிநேர மாறுதல்கள் தேவைப்படுவதை தவிர்க்கின்றன.தரத்தினை உறுதி செய்கின்றன.
ஒரு "Product development Cycle" உதாரணம் காண்போம்.
இது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சற்று வேறுபடும்.ஆனால் அடிப்படை இதுதான்.

கடுமையான சோம்பேறித்தனத்திற்கு இடையே நான் பகிர விரும்பியதை ஓரளவுக்கு கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன்.மேலும் ஒரு பதிவுடன் இத்தொடரை நிறைவு செய்ய எண்ணம்.

மேலும் பார்ப்போம்!