Sunday, December 12, 2010

வலைப்பதிவுலகின் எழுத்து நடை ஒரு பார்வை

வலைப்பூக்களில் மொழிநடையை மூன்று  வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒன்று, தேர்ந்த இலக்கியவாதியின் நடையைப் பின்பற்றுதல் இதில் பல சிக்கல்கள் உள்ளன.எந்தவகையான ஆளுமையைப் பின்பற்றி நம் மொழிநடையை அமைத்துக்கொள்வது என்பது முதல் விஷயம்.
அதிலும் பார்த்தோமானால் இன்றைய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஜெயமோகன் மற்று சாரு நிவேதிதா இருவரின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்.
முன்னவரைப் பின்பற்றுபவர்கள் அனைத்து வார்த்தைகளையும்
  தமிழ்ப்படுத்துகிறேன் பேர்வழி என்று படாத பாடு படுத்திவிடுவர்.மிக எளிய வார்த்தைகளையும் சற்று வேறுவிதமாகக் கூற முற்படுவர்.
புறவயமாக சிந்தித்தல் , அகவயமான எண்ணங்கள் , பொதுவாக நான் அவதானித்த வகையில் , மேலதிக தகவல்கள் என்பன போன்ற வார்த்தைகளை
  புழக்கத்தில் விட்டு சற்றே ஒரு சிற்றிலக்கிய ஒப்பனை செய்வது ஒருவகை.
இலங்கையில் யுத்தம் உக்கிரமாய் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நமது நாளிதழ்கள் புதிதாகக் கொண்டுவந்த வார்த்தைகளே மேலதிகம், பாரிய யுத்தம், காணொளி, சமர் என்பன போன்ற
  நற்றமிழ் வார்த்தைகள். இவற்றை போர் தமிழ்நாட்டுக்கு அளித்த கொடையாகக் கொள்ளலாம்.
வலைப்பதிவர்கள் இவ்வாறான வார்த்தைகளை அதிகம்  புழக்கத்தில் விட்டு தங்களை சற்றே வேறுபடுத்திக் காட்ட முயல்வர்.
பார்த்தீர்களா நான் ஒரு புதிய கலைச்சொல்லை தமிழுக்குத்
   தந்துவிட்டேன் என்பதான கர்வம் அது.இதில் ஒன்றும் தவறில்லை என்றாலும் அதனைப் படிக்கும்போது இயல்புக்கு மாறான ஒரு எண்ணம் நம்முள் எழும்பும். ஆனால் காலப்போக்கில் இச்சொற்களை நாம் படிக்கப் படிக்க மெல்ல நம்முள் ஒரு இயல்பான சொல்லாக அது உருமாறும் என்பது என் எண்ணம். இது ஆரோக்கியமான ஒன்றாகும்.
ஒருவனின் அன்றாட வாழ்க்கைக்கு அவன் ஈட்டும் பொருள் பற்றிக் குறிப்பிடும்போது இப்போதெல்லாம் அனைவரும் " வாழ்வியல் ஆதாரம் " என்னும் வார்த்தையை பயன்படுத்துகின்றனர். இயல் என்று முடியும் எதுவும் அதுபற்றிய படிப்பினைக் குறிப்பதாகும். அறிவியல் , பொறியியல் என்பன போன்ற வார்த்தைகளில் பொறியியல் என்பது , பொறிகள் குறித்த படிப்பு. எனும்போது வாழ்க்கை குறித்த படிப்பு வாழ்வியல் ஆகலாம். ஆங்கிலத்தில் "logy" என்று  முடியும்  விதமாய்  அமையும்  சொற்கள் இதற்கு சமமாக வரும்.
இவ்வாறாக வாழ்வில் ஆதாரம் எனும் சொல் சரியானதல்ல. விஜய் டிவி யின் நீயா நானா கோபிநாத் இன்னுமே இவ்வாறாகக் கூறுகிறார். நானும் அவ்வாறே தவறாகப் புரிந்து கொண்டிருந்தேன். குரு ஜெயமோகன்தான் இதுகுறித்து தெளிவுபடுத்தினார். எதோ ஒருவகையில் புதிய தமிழ் சொற்கள் பயன்பாட்டுக்கு வருவதில் மகிழ்ச்சியே.
உதாரணமாக "RESOLUTION" எனும் சொல் அதாவது செல் போன் திரையின் காட்சித்  தெளிவினைக் குறிக்கவும் , டிஜிட்டல் கேமராவின் காட்சித் தெளிவினைக் குறிக்கவும் உதவும் இச்சொல்லானது  தமிழில் "பிரிதிறன்" என்று அறியப்படுகிறது. காணொளி எனும் வார்த்தை போல இதுவும் ஈழப் போர் காலங்களில் என் அறிவுக்கு எட்டிய சொல்லாகும்.தமிழ் நாட்டில் மும்மொழி கரைத்துக் குடித்த செம்மொழி அறிஞரால் கூட இதுபோன்ற ஒன்றினை அளித்திருக்க முடியாது என்பது என் எண்ணம்.
இரண்டாவதாக  ஒரு முக்கியமான மொழிநடை புரட்சி எழுத்து. புரட்சி என்னும் சொல்லே தமிழ்நாட்டில் இப்போது ஒரு அர்த்தம் இழந்த சொல்லாகிற்று. போன தலைமுறையில் S.S.ராஜேந்தின் புரட்சி நடிகர்.அவர் புரட்சிகரமான வசனங்கள் பேசி நடித்தார். இப்போது புரட்சித்  தளபதி விஷால். விஷால் என்ன புரட்சி செய்து விட்டார் ? ஒன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வில்லன்களைப் புரட்டி எடுக்கிறார். சற்றே வித்தியாசம் காட்ட வேண்டுமென்றால் அதிகபட்சமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வில்லன்களைப் புரட்டி எடுக்கிறார்.இவ்வாறாக புரட்டி எடுப்பவர் எல்லாம் புரட்சி செய்பவர் என்றால் ஒவ்வொரு உணவகத்திலும் தோசை பரோட்டாவை புரட்டிப் போடும் மாஸ்டர்களெல்லாம்,இனி புரட்சி மாஸ்டர் என்று அழைக்கப் படவேண்டும்.  
பதிவுலகில் இவ்வாறான புரட்சி எழுத்துக்களை தொடர்ந்து நிறுவிக்கொண்டிருப்பவர் அன்பு அண்ணன் சாரு நிவேதிதாதான்.அப்பப்பப்பா என்ன ஒரு புரட்சி.அதாவது  கெட்ட வார்த்தைகளை நேரடியாக எழுதினால் அதுதான் புரட்சி. இன்னும் சில பெண்ணியக் கவிஞர்கள் இருக்கிறார்கள்.பெண்களின் அவையங்களை கொச்சையாகக் கூறுதல் அவர்கள் பொறுத்த மட்டில் புரட்சி.அவ்வார்த்தைகளை நான் இங்கு எழுதினால் நானும் ஒரு புரட்சி எழுத்தாளனே .
உலகின் ஆதிசெயலை ஆண் பெண் பந்தத்தை பச்சையாகக் கூறினால் அதுதான் புரட்சி. பதிவுலகின் கட்டற்ற சுதந்திரத்தை ஆக்கப்பூர்வமாக அன்றி, படிக்கும் வாசகனுக்கு ஒரு அதிர்ச்சி அளிக்க மட்டுமே பான்படுத்துவதே இன்றைய நிலையில் ஒரு புரட்சியாகிப் போனது.
இன்னும் ஒருவகையான மொழிநடை இருக்கிறது.அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை வேறு தளங்களிலிருந்து வெட்டி ஒட்டி கடைசியில் தன்  கருத்தினை ஒரு வரியில் கூறுவது. இது ஒரு சுலபமான வழி என்றாலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இது ஒருவகையில் பயனுள்ளாதாக இருக்கிறது.
மேற்கூறிய வகைகளெல்லாம் பதிவர்களால் ஒரு 15 சதவிகிதம் பயன்படுத்தப் படுகிறது என்று கொள்ளலாம். எனில் பெரும்பான்மை வகிப்பது " வம்பு" எனும் மொழிநடையே. சில முக்கியமான தலைப்புக்கள் சினிமாவில் MGR  சிவாஜி , ரஜினி கமல்,அஜித் விஜய்,சிம்பு தனுஷ் , இளையராஜா ரஹ்மான் . இதில் நானும் விதிவிலக்கல்ல.எழுத்துலகம் என்றால் பெரும்பாலான  வம்புகளின் தலைப்பு "ஜெயமோகன் சாரு நிவேதிதா" இதுவே  மூன்றாவது நடை.

ஆரம்பகால பதிவர்கள் அனைவரும் இது போன்ற மொழிநடைகளைக் கடந்தே வந்திருப்பர்.அபூர்வமாகவே தனக்கென ஒரு நடையை  முதலிலேயே அமைத்துக் கொண்டவர்கள் உண்டு.பெரும்பாலும் பதிவர்களாகிய நாமனைவருமே சுயபுராண பிதற்றல்களில் ஆரம்பித்திருப்போம்.அப்புறமாக் கொஞ்சம் நகைச்சுவையாக எழுத முயன்றிருப்போம் , பெரும்பாலும் வடிவேலு டயலாக்குகள் கைகொடுக்கும்.அப்புறம் விதவிதமான சொல்லாடல்கள் கண்டுபிடித்து அதைப் பயன்படுத்தி நமக்கு நாமே பாராட்டி மகிழ்ந்துகொள்வோம். இவ்வாறாக நம் சரக்கு எல்லாம் தீர்ந்து போய் புதிதாக நாம் ஒன்றை உருவாக்க முயலும்போதுதான் நமக்கான மொழிநடையை நாம் அறிந்துகொள்ள முடியும்.இந்த நிலைகள் எல்லாம் கடந்து போய் தற்போது எதை எழுதலாம் என்ற குழப்பத்தின் போதுதான் ஏன் இந்த மொழிநடை பற்றி எழுதக் கூடாது என்ற எண்ணம் வந்தது . எழுதிவிட்டேன்.  

18 comments:

  1. தேவையான பரிசீலனை. பதிவுலகில் புதிதாய் நுழைந்திருக்கும் எனக்கு இப்பரிசீலனை பெரிதும் உதவும்.

    நன்றி!

    ஊரான்.

    எனது வலைப்பூ: www.hooraan.blogspot.com

    ReplyDelete
  2. @ jothi : வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஜோதி அவர்களே.

    ReplyDelete
  3. @ Hooraan : அன்புள்ள ஊரான் , புதிதாக வலைப்பதிவு எழுதவரும் போது நானிருந்த மனநிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையிலிருக்கிறேன்.இனி புதிதாக முயற்சி செய்ய வேண்டும். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.

    ReplyDelete
  4. பதிவுலகில் இவ்வாறான புரட்சி எழுத்துக்களை தொடர்ந்து நிறுவிக்கொண்டிருப்பவர் அன்பு அண்ணன் சாரு நிவேதிதாதான்.அப்பப்பப்பா என்ன ஒரு புரட்சி.அதாவது கெட்ட வார்த்தைகளை நேரடியாக எழுதினால் அதுதான் புரட்சி. இன்னும் சில பெண்ணியக் கவிஞர்கள் இருக்கிறார்கள்.பெண்களின் அவையங்களை கொச்சையாகக் கூறுதல் அவர்கள் பொறுத்த மட்டில் புரட்சி//

    அதே..

    அதைவிட அவரை விழாவுக்கு அழைத்து கொண்டாடுபவர்கள்...???

    ReplyDelete
  5. குழப்பத்தின் வெளிப்பாடே நன்றாக வந்திருக்கிறது ராஜேஷ்...

    அருமை ..

    ReplyDelete
  6. my god...just seen it..sorry brother..:((

    ReplyDelete
  7. ஹ ஹ...எனக்கு கடைசியில் சொன்ன வரிகள் ரொம்ப பிடிச்சு இருந்தது...என்ன ராஜேஷ்..ரொம்பவே வித்யாசமான அலசல்...இதெல்லாம் கூட யோசிக்க முடியுமா னு யோசிச்சேன்...ஹ ஹ...மொழி நடை ங்கிறது முதலில் ஒரு ஆர்வ கோளாறில் அவர்களின் inspiration யாரோ அவங்க நடை தான் அவங்க எழுத முயற்சி பண்றதா இருக்கும்...அதுவும் சுஜாதா நடை அதிகம் விரும்பும் மொழி நடை...கவிதை கூட கவனிசிங்கனால் எனக்கு பெரும்பாலான கவிதை புரியவே புரியாது ..:)) திருக்குறள் நாலடியார் ரேஞ்சு தமிழ் படுத்தும் ஆர்வ கோளாறும் உண்டு நம்மிடத்தில்...நீங்க சொன்ன மாதிரி பாதிப்பு தான்..:)

    ReplyDelete
  8. எனக்கு கூட பதிவுலகம் பார்த்து தான் நிறைய தமிழ் வார்த்தைகள் கத்துகிட்டேன்..உங்க போஸ்ட்டில் காணொளி அப்டிங்கிற வார்த்தை கூட கத்துகிட்டேன்..எவ்வளவு அழகுன்னு கூட யோசிச்சேன்...ஆனால் சில தூய தமிழ் வார்த்தைகள் புழக்கத்தில் விட்டாலும் அதற்க்கு மீனிங் நம்ம தமிழர்களுக்கே புரிய மாட்டேங்கு அப்டிங்கிறது கொஞ்சம் வருத்த படுத்தும் விஷயம்..அதில் நானும் ஒருத்தி..எனக்கு இந்த இறையாண்மை அப்டிங்கிறதுக்கு ரொம்ப னால் பொருள் தெரியாமல் இருந்தேன்...ஒரு வேளை பேச்சு தமிழே நம்மக்கு சௌகர்யமா இருப்பதால னு தெரில..ஆனால் இலங்கை தமிழ் கொள்ளை அழகு ராஜேஷ்...அதிலும் எனக்கு நிறைய புரியலங்குறது வேற விஷயம்...

    ReplyDelete
  9. செமையான போஸ்ட்...என்ன இப்ப சமையல் முடிச்சுட்டு போஸ்ட் போட டைம் கிடைச்சுருச்சா...:))

    ReplyDelete
  10. அப்புறம் இந்த பதிவாளர்கள் ஏன் எப்போ பார்த்தாலும் இந்த சாரு வை இழுக்குறாங்க...ஹ ஹ..நல்லா விளம்பரம் தான் சாருக்கு..அது எதிர்மறையா இருந்தாலும்...:)) அது சாரு மொழி...எல்லாரும் உசுப்பேத்தி விட்டு நானே கூட ஜீரோ டிகிரி புக் வாங்க சென்னையில் ஹிக்கின் பாதம்ஸ் இல் தேடினேன்...பட் இல்லை..செம demand ஆம்..:)) வந்தவுடனே வித்துருதாம்...ஹ ஹ...எங்கே விமர்சனம் அதிகமா இருக்கோ..அங்கே பிரபல படுதபடுறாங்க ..மொழி நடை கூட unique இருந்தால் அவங்களும் வித்யாசம்...அது நல்லா இருக்கோ..கேவலமோ இருக்கோ..:))) am i right??:))

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. @ ஆனந்தி: ஹா ஹா ஹா . இன்னும் நேரம் கிடைக்க மாட்டேங்குது ஆனந்திக்கா . சனி ஞாயிறு தான் கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியுது. அப்புறம் சாருவுக்கு எப்படி நான் விளம்பரமா இருக்க முடியும். அவர் கொஞ்சம் " eccentric" ஆ இருந்தாலும் கூட தமிழில் அவர் அளவுக்கு புகழ் கொஞ்சம் பேருக்குதான் இருக்கு. என்னுடைய எதிர்ப்போ பதிவுகளோ கடல்ல கரைக்கிற பெருங்காயம் மாதிரிதான். அபாரமான துணிவும் நினைத்ததை வெகு சுவாரஸ்யமான நடையில் எழுதும் விதமும் எனக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனா வெறும் வம்பு எழுதுறதுலேயே அவர் வீணடிக்கிறா r
    உங்களோட நெடிய பின்னூட்டங்களுக்குரொம்ப நன்றி.அப்புறம் ஜீரோ டிகிரி வாங்க போறீங்களா? oh my god ;-)

    ReplyDelete
  13. //அபாரமான துணிவும் நினைத்ததை வெகு சுவாரஸ்யமான நடையில் எழுதும் விதமும் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.//
    ofcourse!! :0

    //அப்புறம் ஜீரோ டிகிரி வாங்க போறீங்களா? oh my god ;-)//

    Cool bro!!..My Temp.Degree gets zero...ha ha..:))

    ReplyDelete
  14. @ஆனந்தி..
    ஜீரோ டிகிரி இன்னும் நாம் நான் படிக்கல.. ஆனா கொஞ்சம் ஏடாகூடமான நாவல்னு கேள்விப்பட்டிருக்கேன்.நான் ஜெயமோகன் அணியா இல்ல சாறு அணியணு கேட்டா நான் ஜெயமோகன் பக்கம்தான்னு சொல்லுவேன்.ரெண்டு பெரும் வேற வேற genre தான்.ஆனா ஜெ கதைகள் என்னைக் கவர்ந்த அளவுக்கு சாருவோட கதைகள் எனக்குப் பிடிக்கல.ஜீரோ டிகிரி படிச்சிட்டு நல்லா இருந்த சொல்லுங்க. நானும் வாங்கிப் படிக்கிறேன் ;-)

    ReplyDelete
  15. brother..நானும் பெருசா சாரு புக்ஸ் படிச்சதில்லை...நான் அவரோட ஆர்டிகிள்ஸ் நிறைய படிச்சதில் கடுப்பானவள்..கோணல் பக்கங்கள் முதலில் படிச்சு பாருங்க..நிறைய சுவாரஸ்யமும் இருக்கும்...நிறைய கடுப்பும் அடிக்கும்...அதிகப்ரசங்கினு சொல்வோம்ல..அதோட அக்மார்க் அந்த புக் இல் தான் தெரியும்...அவர் படைப்பிலேயே ஜீரோ டிகிரி தான் நல்லா இருக்கும்னு கேள்வி பட்டு இருக்கேன்...பட் நீங்க சொன்ன ஸ்க்ரிப்ட் தான் குண்டக்க மண்டக்க போலே அந்த கதைன்னு :))) தெரிஞ்சுகிட்டேன்..இருந்தாலும் படிச்சு பார்க்கணும்...:))முதலில் புக் கிடைக்கட்டும்:))))))...நான் குறிப்பிட்ட இந்த எழுத்தாளர் தான்னு எல்லாம் படிக்கிறது கிடையாது..படிக்க எது சுவாரஸ்யமோ அதுவுமே என் சாய்ஸ்:))))

    ReplyDelete
  16. @ஆனந்தி..
    ஹா ஹா ஹா.. எது எப்பிடியோ படிக்க சுவாரஸ்யமா இருந்தா ஓகே தான். கோணல் பக்கங்கள் நான் படிச்சதில்ல.ஆனா எக்ஸ்டென்சியலிசமும் பேன்சி பனியனும் படிச்சிருக்கேன்.அப்பப்பா ஒருபானை சோத்துக்கு ஒரு சோறு பதம் ;-)

    ReplyDelete
  17. @பயணமும் எண்ணங்களும்
    @ பயணமும் எண்ணங்களும் : என்ன இருந்தாலும் சாரு இன்று தமிழில் ஒரு மறுக்க முடியாத ஆளுமை. என் வருத்தம் என்னவென்றால் முன்பெல்லாம் அவர் மட்டுமே கெட்டவார்த்தைகளை எழுதிக் கொண்டிருந்தார். இப்போது அவர் பாதிப்பில் நிறைய பேர் எழுதுகின்றோம். கூடிய விரைவில் பதிவுலகில் கெட்டவார்த்தை மட்டுமே காணக் கிடைக்குமோ என்கிற பயம்தான் எனக்கு. கெட்டவார்த்தைகளை பயன்படுத்துவதில் தவறொன்றும் இல்லை.ஆனால் வலிந்து அவற்றைப் பிரயோகப் படுத்துவதில்தான் எனக்கு உடன்பாடு இல்லை.
    விழாக்களுக்கு அவரை அழைத்து சிறப்பிப்பது வேறு எதற்கு ? முற்போக்கு முகப்பூச்சு பூசத்தான்.

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !