Friday, November 20, 2009

ஸ்பூனரிசம் (Spoonerism)

சில சமயம் நாம் பேசும் பொது வார்த்தைகளின் எழுத்துக்களை மாற்றி உச்சரித்து புதிய வார்த்தைகளை தவறுதலாக உருவாக்குவோம்.எல்லாருமே எதோ ஒரு சமயம் அப்படி tongue slip ஆகியிருப்போம். உதாரணம் ஓடிப் போனான் , போடி ஓனான். ஒரு அக்றிணை பிறவியை போடி வாடி என்று கூறுவது போல் ஆகிவிட்டது.கல்லூரி நாட்களில் நான் இவ்வாறு யோசித்திருக்கிறேன்.பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் உபயோக்கியமுடியாத வார்த்தைகள்.(Unparliamentary words ).


ஒருமுறை விகடனில் கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா இதுபற்றி குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு tongue slip ஆவதற்கு Spoonerism என்று பெயராம்.1844-1930 வரை லண்டனில் வாழ்ந்த ரெவரண்ட் வில்லியம் ஆர்ச்சிபால்ட் ஸ்பூனர் என்பவர் (William Archibald Spooner) நிறைய டங் ஸ்லிப்பர்களை உருவாக்குபவராக இருந்தார். தன் மாணவர்களிடம் "Go and take a shower " என்பதற்கு பதிலாக " Go and shake a tower" என்று தவறுதலாக கூறிவிடுவாராம்.அதனால் அவர் பெயராலேயே "Spoonerism" என்று அழைக்கப்படுகிறது.(http://en.wikipedia.org/wiki/Spoonerism )

இதுபற்றியெல்லாம் நான் படிப்பதற்கு முன்பாகவே முதன் முதலில் அவ்வை ஷண்முகி படத்தில் கிரேசி மோகனின் டங் ஸ்லிப்பர்களை கேட்டிருக்கிறேன். படத்தில் வேலைக்காரி ராணி வீட்டில் திருடுவதை மாமி வீடியோ படம் எடுத்து போட்டுக் காண்பிக்கும் போது சொல்வார் " இதெல்லாம் பகல்ல எடுத்தது .. ராத்திரில எடுத்தது வேற தனியா இருக்கு" என்பார். உடனே டெல்லி கணேஷ் பதட்டத்தில் "வேண்டாம் மாமி வேண்டாம் .. பகல்ல எடுத்ததே போதும் .. ஒரு சோன பாத்துக்கு ஒரு பான சோறு" என்று உளறுவார்.(ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தான் அப்படி ஆகிவிட்டிருக்கும்).

பஞ்சதந்திரம் படத்திலும் நிறைய ஸ்பூன்கள் உண்டு.

கமல் சிம்ரனைப் பார்க்க நல்ல போதையில் நண்பர்களோடு வருவார். அப்போது நண்பர்களிடம் " ஒருவேள அவ என்னப் பார்த்த உடனே கோவத்துல துப்பில மூஞ்சிட்டானா " என்று கேட்பார்.


லாட்ஜில் ரம்யா கிருஷ்ணன் உடம்பைத் தூக்கி அங்கிருக்கும் டனல் வழியாக சலைவை அறைக்கு அனுப்பும் போது சர்தார்ஜி வேடத்திலிருக்கும் ரமேஷ் கண்ணாவும் தவறுதலாக உள்ளே விழுந்து விடுவார். கீழே ஜெயராம் " இங்க ரெண்டு பாடி வந்திருக்கு! அதுல ஒண்ணு சர்தார்ஜி பாடி! என்று கத்துவார். மேலிருக்கும் யூகி சேது உடனே கமலிடம் " பர்தார்ஜி சாடியாமா " என்பார்.


அப்புறம் பிணத்தை பாலத்திலிருந்து கீழே போட்டுவிட்டு அதனுள் விசிட்டிங் கார்டு இருப்பதை அறிந்து வண்டியைத் திருப்பும் போது நாகேஷ், "எங்கே போறேள்" என்பார். "அதுவா மாமா பர்ஸ் அடிக்கப்போன இடத்துல பிஸ்ஸ மறந்து வச்சிட்டோம்!" என்பார் கமல்.

வேறு படங்களில் நான் இதுபோன்று பார்த்ததில்லை.முன்பு கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா வசந்த் (கணேஷ்,வசந்த்) கூறிய ஸ்பூன்களில் இரண்டை இறுதியில் குறிப்பிட்டிருந்தார். அது பற்றி நான் சிவகுமார் சாரிடம் கூறியபோது விழுந்து விழுந்து சிரித்தார். நண்பர்கள் சிலருக்கு புரியவில்லை. வசந்த் சொன்னவை இவைதான்.

1. மக்கள் குடிக்க கஞ்சியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
2.(ஒரு கல்யாண வீட்டில் பந்தியில் சாம்பார் பரிமாறுபவர் ஒரு ஓட்டை அகப்பையை வைத்து சிந்தச் சிந்த சாம்பார் ஊற்றிக் கொண்டு வருகிறார்.அப்போது பந்தியில் சாப்பிட அமர்ந்திருப்பவர் அவரிடம் கேட்கிறார்.)
இது என்ன ஓட்ட ஆப்பையா?

புரிந்தால் சிரியுங்கள். இல்லாவிட்டால் புரிந்தவரிடம் கேளுங்கள்.

1 comment:

  1. //ஒருவேள அவ என்னப் பார்த்த உடனே கோவத்துல துப்பில மூஞ்சிட்டானா//

    //பர்தார்ஜி சாடியாமா //

    //அதுவா மாமா பர்ஸ் அடிக்கப்போன இடத்துல பிஸ்ஸ மறந்து வச்சிட்டோம்//

    இதெல்லாம் மறக்கவே முடியாது மச்சி.........................

    கடைசி ரெண்டும் படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன் மச்சி.....

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !