Monday, January 10, 2011

BBC காணொளித் தொகுப்பு-விலங்குகளின் விந்தை உலகம்-பாகம் 2

மது அருந்தும் குரங்குகள் :
மது அருந்துவது ஏதோ மனித இனம் மட்டும் செய்யும் செயல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்பதன் ஆதாரமே கீழ்வரும் காணொளி. கரீபியன் தீவுகளில் குரங்குகள் கடற்கரையோர மது விடுதிகளில் புகுந்து மதுபானங்களைத் திருடிக் குடிப்பது சாதாரண நிகழ்வு. மனிதன் மதுவை விரும்பும் ஜீன்களுக்கான காரணி முன்னோர்களிடமிருந்து  மரபணு வழியாகத் தொடர்ந்து வந்திருக்கிறது என்பது விஞ்ஞானிகள் வாதம். 
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகை மது பிடிப்பதைப் போல குரங்குகளும் தனக்கென தனியான ருசியினை  விரும்புகின்றனவாம்.
ஆச்சரியப் படத்தக்க வகையில் வெகு சில குரங்குகளே மதுவைத் தவிர்க்கின்றன, அந்த சதவிகிதம் மது அருந்தாத மனிதர்களின் சதவிகிதத்திற்கு நிகராக இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
குரங்குகள் போதையில் செய்யும் குறும்பும் சேட்டைகளும் அட்டகாசம் ;-)




அகவொலி (Infrasonic Sound) ஆல் ஈர்க்கப்படும் முதலைகளும் திமிங்கலங்களும் :

மனிதன் செவிகளுக்கெட்டாத நுண்ணிய ஒலிகளை மிருகங்கள் கேட்பதுண்டு. மனிதன் வேட்டை மிருகமாக இருந்த காலத்தில் அவனுக்கும் அத்தகைய புலன் கூர்மை இருந்தது. பரிணாமம் வளர வளர தனக்கான ஆயுதங்களை அவன் செய்யத்தொடங்கியதும் கூரிய புலன் உணர்விற்கான அவசியம் குறையலாயிற்று.காலப்போக்கில் அவன் அத்திறனை இழந்துவிட்டிருந்தான்.
அமெரிக்காவின் ஒரு மாகாணமாகிய ப்ளோரிடாவில் வசிக்கும்  முதலைகள் கார்களின் உறுமலில் உள்ள அகவொலிகளைக் கேட்டு தன்னுடைய இணையென எண்ணி ஏமாறுகின்றனவாம். கார் மட்டுமல்ல , படகுகள் ஏற்படுத்தும் சத்தமும் , விண்ணில்  ஏவப்படும் ராக்கெட்டுகள் எழுப்பும் நுண்ணொலிகளும் கூட அவற்றைக் குழப்புகின்றனவாம். இணைதான் அருகில் உள்ளது என்று எண்ணி தன் உடம்பை அதிரச்செய்து   தண்ணீர் திவலைகளை எழுப்பி தன் இருப்பிடத்தை அறியச்செய்யுமாம்
அதுபோலவே பாடும் திமிங்கலங்களும் ஒன்றையொன்று தொடர்புகொள்ள பிரத்யேக அகவொலிகளை எழுப்பும். கடினமான சொற்றொடர்களை நாம் நினைவில் கொள்ள ராகமாக படிப்பதுபோல அவைகளும் ராகமாக ஒலி எழுப்புமாம். ஆனால் மனிதன் உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பல்களும் இது போன்ற Infrasonic Sound  மூலமாகவே வேறு கப்பல்களுடன் தொடர்பு கொள்வதால் திமிங்கலங்களின் சமிக்ஞை இடையூறுக்குள்ளாகின்றனவாம்.




எறும்புகளின் விவசாயம்

விவசாயம் செய்வது மனிதனின் தொழில் மட்டும் இல்லை. சிலவகையான எறும்புகளும் தனக்கென்ற உணவினை விளைவித்துக் கொள்கின்றன.
ஒருவகையான பூச்சிகள் தேன்போன்ற திரவம் ஒன்றை சுரக்கின்றன. எறும்புகள் அவற்றை மொத்தமாகப் பிடித்து அந்த பூச்சி விரும்பி உண்ணும் தாவரத்தின் மேல் கொண்டு சேர்க்கின்றன. பூச்சிகள் தாவரத்தின்  சத்தினை உறிஞ்சி வாழ்கின்றன, பதிலுக்கு எறும்புகள் விரும்பும் தேன்போன்ற திரவத்தை (Nectar) எறும்புகளுக்கு அளிக்கின்றன. எறும்புகள் செய்யவேண்டியது தன்னுடைய கொம்புகளினால் (Antennae) அந்த பூச்சிகளை உரசித்  தூண்டுவது மட்டுமே. பூச்சிகளுக்கும் நன்மை உண்டு , பிற பூச்சிகளிடமிருந்து எறும்புகள் அந்த தேன் தரும் பூச்சிகளைக் காக்கின்றன.
எறும்புகளின் விவசாயம் ஆச்சரியமூட்டுகின்றது.   




எண்ணற்ற விந்தைகள் கொண்ட விலங்குகளின் உலகத்தைப் பற்றி மனிதன் அறிந்தது மிக மிகக் குறைவுதான்.நவீன தொழில்நுட்பத்துடன் நாம் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை ஆவணப்படுத்தி வருகின்றோம்.
மேலும் சில சுவாரஸ்யமான காணொளிகளை வரும் பதிவுகளில் காண்போம்.

Saturday, January 8, 2011

தமிழன் : அன்றும், இன்றும்..!


தமிழன் அன்று :

உண்டால் அம்ம, இவ்வுலகம் – இந்திரர்;
அமிழ்தம் இயைவது ஆயினும், ‘இனிது’ எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின்; உயிரும் கொடுக்குவர், பழி எனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே
அதாவது தேவலோகத்து இந்திரர் அமிர்தமே தந்தாலும் தமிழன் தனியாக சாப்பிடாமல் எல்லாருடனும் பகிர்ந்து உண்பானாம்.

புகழ் கிடைக்கிறதென்றால் தமிழன் உயிரைக் கூட கொடுப்பானாம், பழி நேரும் நிலை வந்தால் உலகையே கொடுத்தாலும் அச்செயலைச் செய்ய மாட்டானாம்.

அயர்வில்லாது உழைப்பவன், தமக்கென வாழாமல் பிற நலனுக்காகவும் வாழ்பவன் இவன் போன்றவர்கள் வாழ்வதாலேயே இன்னும் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி கூறியிருக்கிறார். 

இந்த புறநானூற்றுப் பாடல் அந்நாளைய தமிழனின் இயல்புகளை குறைந்த சொற்களில் நிறைவாய் விளக்குகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளில் நம் இனம் எப்படி எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்று பார்ப்போம்.
  
தமிழன் இன்று :

1.அன்டார்டிகாவுக்கே  போனாலும் அரிசி சோறு செய்து சாப்பிடுவது , தன்மானமா சாப்பாடா என்று கேட்டால் சாப்பாட்டில் சரணடைவது.

2.தன் பிள்ளைகள் தமிழை எவ்வளவு தப்பாக எழுதினாலும் வாசித்தாலும்  கவலைப்படாமல் இருப்பது , மாறாக ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையோ தவறோ இருந்தால் டியூஷன் வைத்தாவது ஆங்கிலம் வளர்ப்பது.

3.தமிழெல்லாம் எனக்கு வாசிக்கிறதோ எழுதுறதோ ரொம்ப கஷ்டம் என்று கூறுவது . அதனினும் கொடுமை அவ்வாறு கூறுவதைப் பெருமையாக நினைப்பது.

4.தப்பித்தவறி யாராவது கொஞ்சம் தமிழ் ஆர்வத்துடன் இருந்தால் "வந்துட்டாருய்யா புலவர்" என்று அவர்களைப் பழிப்பது.

5.அயல் மொழி பேசும் ஊரில் தமிழனைக் கண்டால் ஆங்கிலத்திலேயே பேசுவது(அலட்டுவது). பெரும்பாலும் மூஞ்சியை சுளித்துக் கொண்டே பிற தமிழனைத் தவிர்ப்பது.
.
6.கோபப்படவேண்டிய  முக்கியமான  விஷயங்களுக்கு மொண்ணையாக இருப்பது , உப்புப்பெறாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி கோவப்படுவது.
(ஊழல்கள், ஈழம், மு செயல்பாடுகள் போன்றவற்றில் அமைதியாக இருந்துவிட்டு, கமலஹாசன் படம் வரும்போது பிரச்சனை செய்வது)

7.இலவசங்களுக்காக பல்லிளித்து நிற்பது , மேலும் இந்த மக்களை சுலபமாக ஏமாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையை ஆட்சியாளர்கள் மனதில் ஆணித்தரமாக பதிய வைத்தது.

8.பணம் கொடுத்தால்தான் இனிமேல் ஒட்டு என்னும் அளவிற்கு இனமானத் தமிழன் ஈனமான          தமிழனாக ஆனது.

தமிழனின் மிகப்பெரும் சரிவு  அவன் எதையும் எதனுடனும் சமரசம் செய்து கொள்வது.
சுலபத்தில் எதையும் மறந்து விடுவது.

அன்றைய தமிழனின் குணநலன்களையும் இன்றைய தமிழனின் குணநலன்களையும் பார்த்தால் எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம் என்றுதான் கூறத்தோன்றுகிறது.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

என்பது புறநானூற்றுப் பாடல் பொன்முடியார் எழுதியது.

இந்த இரண்டாயிரம் வருடங்களில் நாம் சீரழிந்ததற்குக் காரணம் நன்னடை நல்காத நமது வேந்தர்கள் என்றே நினைக்கிறேன்.
அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி..!

Monday, December 27, 2010

"தல" புராணம் : அஜித் - ஒரு ரசிகனின் பார்வையில்..!

நடிப்பா ? வரவே  வராது... வசன உச்சரிப்பா ? அப்பிடீன்னா..? நகைச்சுவை ? மருந்துக்கும் கூட முடியாது.. நடனம்..? ஒரு நவீன கால பாக்யராஜ்.. அப்போ என்னதான் இவர்கிட்ட இருக்கு ? இது எல்லாவற்றையும் மீறிய ஒரு வசீகரம்..
ஆங்கிலத்தில் "Manliness" என்பார்கள்.தமிழில் இணையான வார்த்தை என் ஞாபகத்துக்கு வரவில்லை மன்னிக்கவும். ஹக் ஜாக்மன் (Hugh Jackman) , ஜார்ஜ் க்ளூனி (George Cloony)  போன்ற நடிகர்களிடம் காணப்படும் ஒரு "Manliness" தமிழில்  இவரிடம் மட்டுமே இருக்கிறது என்பது என் எண்ணம்.

















தன்னுடைய எல்லா நெகடிவ் களையும் பாசிடிவ் ஆக்கிய விடாத உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை  கொண்டவர்  அஜித் குமார் .. இன்றைய தேதியில் ரஜினிக்கும் கமலுக்கும் நிகரான ஓப்பனிங் உள்ள ஹீரோ. சில காலம் முன்புவரை  விஜய்க்கு போட்டியாக காணப்பட்டவர், பக்குவமாக அதிலிருந்து விலகி இன்றைக்கு தனக்கென்றான ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களையும் கவர்ந்தவர். வெற்றிகளும் தோல்விகளும்  மாறி  மாறி பார்த்திருந்தாலும் "இண்டஸ்ட்ரில என் அளவுக்கு ப்ளாப்ஸ் யாரும் கொடுத்ததில்ல பாஸ்" என்று திறந்த பேட்டி அளித்தவர்.
பள்ளிப்படிப்போடு கல்விக்கு மூட்டை கட்டி, தன் மனம் விரும்பிய பைக் ரேஸ் பக்கம் கவனம் திருப்பி சில படங்களில் சின்னவேடங்களில்  தலை காட்டி  கொஞ்சம் கொஞ்சமாக முட்டி மோதி இன்று தமிழ் திரையுலகில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் அஜித்தின் வாழ்க்கை ஒரு தன்னம்பிக்கைப் பாடம்.

இன்றைய சூழ்நிலையில் தயாநிதி அழகிரி  மற்றும் உதயநிதி ஸ்டாலின் போன்றோர் வெகுவிரைவில் சூப்பர் ஸ்டாராகவும் , உலக நாயகனாகவும் ,தமிழ்நாட்டு மக்கள் மனதில் ப்ரோக்ராம் செய்யப் படலாம் , உபயம் சன் டிவி & கலைஞர் டிவி . ஆனால் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இன்றி , வழிகாட்டுதலுக்கு காட் பாதர் யாருமின்றி தன்னந்தனியாய் உச்சம் தொட்ட "தல" அஜித்துக்கு யாரும் நிகராக முடியாது.






















பிரேம புஸ்தகம் என்னும் தெலுங்கு படத்தில் அறிமுகமாயிருந்தாலும் தமிழில் முதன் முதல் அவர் நடித்த படம் அமராவதி  என்று நினைக்கிறேன். பின்பு பவித்ரா, பாசமலர்கள் , வான்மதி , கல்லூரி வாசல் போன்ற படங்களில் ஒரு பெரிய எதிர்பார்ப்பில்லாத புதுமுகமாக நடித்துக் கொண்டிருந்த அவர் முதல் வெற்றியைச் சுவைத்தது ஆசை படம் மூலமாகத்தான்.





வசந்தின் த்ரில்லர் கதை, பிரகாஷ்ராஜின் சைக்கோ நடிப்பு, சுவலட்சுமியின் இளமை, தேவாவின் அற்புத இசை இவற்றுடன் அஜித்தின் சாக்லேட் பையன் தோற்றம் மற்றும் டீசன்ட்டான நடிப்பு எல்லாம் ஒன்று சேர, முதல் வெற்றி. அதுவரை அறிமுகமாகி மூன்று நான்கு வருடங்கள் தத்தளித்துக் கொண்டிருந்தவர் முதல் முறையாக ஒரு கவனிக்கத்தக்க நடிகரானார். சமகாலத்தில் இளைய தளபதி டாக்டர் விஜயோ , அப்பா S. A. சந்திரசேகர் இயக்கத்தில் சங்கவி, யுவராணி புண்ணியத்தில் வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தார்.
பின்பு காதல் கோட்டை அவருக்கு அடுத்த வெற்றிப்படமாகியது. அப்போதெல்லாம் கதையின் நாயகனாக இருந்த அஜித் கதாநாயகனாக உருவெடுக்க இன்னும் சில வருடங்கள் பிடித்தது. காதல் கோட்டைக்கு அடுத்து உல்லாசம் போன்ற படங்களில் நடித்த பின்பு அறிமுக இயக்குனர் சரணிடம் கை கோர்த்த படம் காதல் மன்னன். இதற்குள் சற்றே தன் திறமைகளை மெருகு ஏற்றிக் கொண்ட அஜித் , சரணின் புதிய கதை , பரத்வாஜின் புதிய ரக இசை , விவேக்கின் இயல்பான நகைச்சுவை மற்றும் தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலமாக வெற்றிக்கனியைப்  பறித்தார்.இப்போது அவருக்கென்ற ஒரு பாதை உருவாகும் அடித்தளம் அமைந்தது.காரணகர்த்தா சரண்.













காதல் மன்னன் வந்த சமயத்தில் விகடன் இதழில் குட்டி அரவிந்த் ஸ்வாமி என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கிறது.
பின்பு உயிரோடு உயிராக , உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் , உன்னைத் தேடி, ஆனந்தப் பூங்காற்றே  போன்ற படங்களில் நடித்தார்.இவற்றில் கடைசி மூன்றும்  வெற்றிப் படங்கள்.
அஜித் தன்னுடைய வளர்ச்சியில் துணைக்குச்  சேர்த்துக்கொண்ட அறிமுக இயக்குனர்கள்  ஏராளம்.இன்று சரணில் தொடங்கி , S.J .சூர்யா , A .R .முருகதாஸ், சமீபத்தில் மதராசப் பட்டினம் இயக்குனர் விஜய் வரை அஜித்தின் அறிமுகங்களே.

அஜித்தின் நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்திய படம் வாலி. S.J.சூர்யாவை அறிமுகப்படுத்திய படம். இரட்டை வேடங்களில் கத்திமேல் நடக்கும் வில்லின் பாத்திரத்தில், வெறும் கண்பார்வை ,முகத்தில் காட்டும் உணர்ச்சிகள்  மூலமாக இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான  வேறுபாட்டினை துல்லியமாக வெளிப்படுத்தி   அனாயசமாக நடித்து வெற்றிபெற்ற படம் அது.










வாலிக்குப் பின்பு ஒரு முன்னணி கதாநாயனாக அறியப்பட்டார். அடுத்த அடியாக சொல்லி அடித்த படம் " அமர்க்களம்" . இம்முறை தன்னுடைய முந்தைய வெற்றிக் கூட்டணியான சரண் மற்றும் பரத்வாஜுடன் இணைந்தார். முதல்முறையாக ஒரு ரவுடி வேடம். பாடல்கள் , நகைச்சுவை , அதிரடி சண்டைகள் , அஜித்தின் மாஸ் இமேஜைக் கூட்டியதுடன் ரசிகர் பட்டாளமும் அதிகரிக்க ஆரம்பித்தது.





















படத்தில் தன் ஜோடியான தமிழ் சினிமாவின் கண்ணியமான நடிகை என்று அறியப்பட்ட ஷாலினியுடன் காதலாகி திருமணத்தில் முடிந்தது.
அதுவரை சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட அஜித் , அதன் பின்பு மிஸ்டர் க்ளீனாக மாறினார்.

அமர்க்களத்திற்கு பின்பு துரையுடன் இணைந்து முகவரி என்னும் சற்றே இயல்பான கதையில்  நடித்தார். அமர்க்களம் போன்ற  அதிரடியை வெளிப்படுத்திய படத்திற்கு அடுத்தபடியாக ஒரு மென்மையான படம் ரசிகர்களை ஏமாற்றம் கொள்ளச்செய்தது என்றாலும் முகவரியும் நல்ல விமர்சனங்களைப் பெற்று ஒரு வெற்றிப்படமாகியது.
சமகாலத்தில் விஜயும் பூவே உனக்காக, பிரியமுடன், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், நிலவே வா, துள்ளாத மனமும் துள்ளும், என்று அடுத்தடுத்து வெற்றிகளை அளித்து இருவருக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவியது.














முகவரிக்கு அடுத்து ரசிகர்களின் மனநிலையை அறிந்து அடுத்த ஆக்ஷன் அவதாரம் எடுத்த படம் A.R.முருகதாசின் தீனா . தற்போது தோற்றத்திலும் பெரிய மாறுதல்களை அடைந்திருந்தார்.உடம்பு ஏகத்துக்கும் பெருத்திருந்தது என்றாலும் ரசிகர்களின் பெருத்த ஆதரவு, சண்டைக்காட்சிகள் மற்றும் யுவனின் துள்ளல் இசை என்ற சரியான கூட்டணி இருந்ததால் வெற்றி கிடைத்தது. முதன்முறையாக ரசிகர்களால் "தல"என்று அழைக்கப்பட்டார்.














தீனாவுக்குப் பின் அடுத்த கமல் ஆகும் ஆசையில் சிட்டிசன் படத்தில் பல வேடங்களில் வந்து  பயமுறுத்தினார். ஓரளவுக்கு ஓடினாலும் பெரிய வரவேற்பில்லாமல் சறுக்கியது.












குறிப்பாகச் சொன்னால் அஜித்தின் சறுக்கல் சற்று பலமாகவே இருந்தது.தொடர்ந்து ரெட், பூவெல்லாம் உன்வாசம் , இடையில் கார் ரேஸ் என்று இரண்டு வருடங்கள் படம் நடிக்காமல் இருந்தது என்று அவர் கீழிறங்கத் தொடங்கினார்.
பின்பு அனுபவ இயக்குனர் K .S . ரவிக்குமாருடன் இரட்டை வேடத்தில் வில்லன் படம் மூலம் வெகுநாட்களுக்குப் பின் வெற்றியைச் சுவைத்தார்.

ஒரு வெற்றி அடுத்து சில தோல்விகள் என்று அவருடைய க்ராப் தொடர்ந்து மேலும் கீழுமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்ததது.
ராஜா, ஜனா, ஆஞ்சனேயா என்று சில ஆவரேஜ் படங்களுக்குப் பின் சரணுடன் அட்டகாசம் மூலம் இணைந்தார் , இரட்டை வேடம், பரத்வாஜ் இசை என்று தனது செண்டிமெண்ட் வெற்றிக் கூட்டணி மூலம் ஓரளவுக்கு வெற்றி பெறவே செய்தார். அதிலும் வெள்ளை வெட்டி வெள்ளை சட்டை ரௌடியாக அட்டகாசமாக நடித்திருப்பார். 













இந்த காலகட்டத்தில் விஜய்க்கும் அஜித்துக்குமான பனிப்போர் ஆரம்பித்தது. யார்ரா உங்க தல என்று திருமலையில் அஜித்தை தாக்கினார், பதிலுக்கு இமயமலையில் என்கொடி பறந்தால் உனக்கென்ன என்று பதிலுக்கு இவர் திருப்பிக் கேட்க நமக்கெல்லாம் பதிவு  எழுத ஒரு தலைப்பு கிடைத்தது . அஜித்தா விஜய்யா என்று கல்லூரியில் ஹாஸ்டலில் இரு அணிகளாகப் பிரிந்து நெடுநேரம் வாக்குவாதம் செய்வோம்.
தன்னுடைய வெளிப்படையான பேச்சினால் நிறைய எதிரிகளை சம்பாதித்துக் கொண்ட நேரம் இது. வாரமலர் பத்திரிகையில் வாய்க்கொழுப்பு நடிகர் என்று குறிப்பிடப்பட்டார். இது போன்ற எதிர்மறையான நிகழ்சிகளால்  இனி பத்திரிகைகளில் பேட்டி தருவதில்லை என்று மவுனத்தில் ஆழ்ந்தார்.
பரமசிவன், ஜி, திருப்பதி என்று படங்களில் உடம்பைக் குறைத்து நடித்தார்.
















பெரிய வெற்றி இல்லாத் நேரத்தில் ஒரு கட்டாய வெற்றி தேவைப்பட்ட காலத்தில் மறுபடியும் K.S.ரவிக்குமாருடன் இணைந்து வரலாறு படத்தில் நடித்தார். தொடர்ந்த பிரச்சனைகள் காரணமாக மிக மெதுவாக எடுக்கப் பட்ட படம் அது. அதில் அஜித் ஆரம்ப காட்சிகளில் குண்டாகவும்  பின்பு மெலிந்தும், பாடல் காட்சிகளில் "நான் கடவுள்" படத்திற்காக வளர்த்த முடியுடனும் ஒரு கலவையாக  நடித்திருப்பார்.
நடனமே ஆடத்தெரியாது என்று தன் மீதிருந்த குறையை துடைத்தெறிந்த படம் இது. இளமை பாடலிலும் சரி இன்னிசை அளபெடை பாடலிலும் சரி மிகச்சிறப்பாக ஆடியிருப்பார். அடிப்படையில் நான் ஒரு " STIFF" ஆன ஆள் என்று கூறிய அஜித் ஒரு பெண்மை கலந்த நடனக் கலைஞர் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.





பின்பு நான் கடவுள் படத்தின் போது ஏற்பட சில கசப்பான சம்பவங்கள் மூலம் கோபத்தில் நடித்த படம் ஆழ்வார்.அது தோல்வியடையவே முதல் முறை சற்று நிதானமாக முடிவெடுக்க ஆரம்பித்தார்.
இது குறித்த தகவல்களை " www.adikkadi.blogspot.com" இல் அந்தணன் தல புராணமே பாடி தொகுத்திருப்பார். அஜித்தின் நல்ல மனதினை அறிய இந்த இணைப்புகளைப் பார்க்கவும்.


அடுத்ததாக புதியவர் விஜயுடன் கிரீடம் என்னும் மலையாள ரீமேக் படத்தில் எந்த ஹீரோ பில்டப்புமின்றி அமைதியாக நடித்திருப்பார்.அஜித் மெதுவாக பக்குவமடைந்த நேரம் இது.

அதன் பின்பு அவர் நடித்தபடம் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அமிதாப் -ரஜினி , ஷாருக் - அஜித் என "பில்லா " ரீமேக். இந்திய சினிமாவில் இதுபோன்ற ஸ்டைலிஷ் ஆன ஆக்கத்தில் வேறு ஒரு படம் வந்ததில்லை என்று விமர்சனங்களில் சிலாகிக்கப்பட்ட படம் அது.யுவனின் இசையும் நயன்தாரா, நமீதா என்று கவர்ச்சியும் அஜித்தின் தோற்றமும் படத்தை பெரிய வெற்றிப்படமாக்கியது.



























ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ஒரு வெள்ளைக் கோட்டும் கறுப்புக் கோட்டும் அணிந்து முன்னும் பின்னும் நடந்து மட்டுமே ஒரு படத்தை வெற்றி பெறச் செய்த அஜித்தின் இமேஜ் அசைக்க முடியாதது.
பின்பு ஏகனில் ஏகத்துக்கும் பெரிதாக இருப்பார், எல்லாரும் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் போது தன்னிடம் தொப்பை இருக்கிறது என்று வெளிப்படையாக படத்திலேயே கூறியிருப்பார்.
முன்பு ஏற்பட்ட விபத்துக்காக ஸ்டீராய்டு உள்ள மருந்து சாப்பிடுவதால் உடம்பு பெரிதாகி விடுகிறது என்றும் உடற்பயிற்சி செய்தால் முதுகு  வலிக்கிறது என்றும் அதனால் தான் உடம்பை சரிவர பராமரிக்க முடியவில்லை என்றும் அஜித் கூறியதாக அந்தணன் எழுதியிருந்தார். தலையிடம் நாம் அதெல்லாம் ஒரு குறையாக நினைப்பதில்லையே.
மறுபடியும் வித்தியாமான ஹேர் ஸ்டைல் , மீசையும் கிருதாவும் இணைந்த தோற்றம் , கருப்பு கண்ணாடி , கோட் என்று அசல் படத்திற்காக சரண் பரத்வாஜ்  கூட்டணியில் இணைந்திருப்பார். இம்முறை சற்று ஏமாற்றம் தான். திரைக்கதையாசிரியராகவும் அவதாரமெடுத்திருப்பார் அஜித்.













என்னைப் பொறுத்தவரையில் படம் மோசமில்லை ரகம்தான். இன்னும் ஷார்ப்பான எடிட்டிங்கும் , நல்ல இசையும், ஒவ்வொரு காட்சிக்கும் இடையிலான எதோ ஒரு மிஸ்ஸிங் லிங்கும் இணைக்கப்பட்டிருந்தால் படம் கண்டிப்பாக வெற்றிபெற்றிருக்கும்
பில்லா படம் வந்த சமயத்திலேயே விஜயுடனான பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. அதன் பின்பு தல தளபதி மோதல் படங்களில் இல்லை. எல்லாருக்கும் பொதுவானநடிகராக அஜித் மாறி வருகிறார்.

கவுதம் மேனனுடனான மனக்கசப்புகள் , பாசத்தலைவனைப் பாராட்டியதில் தன் குமுறல்களை வெளியிட்டு மு   கோபத்திற்கு ஆளானது என்று அவருடைய கெட்ட நேரம் தொடர்கிறது.
தற்போது  தமிழ் சினிமாவின் இப்போது ஒலிக்கும் தைரியமான குரல் யாருடையது என்று பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது பட்டங்களைத் துறந்த அஜித் குமாருடையதுதான். பாசத்தலைவனை பாராட்டுகிறேன் என்று ஒட்டு மொத்த திரையுலகமே சொம்படித்து நடிகைகளை குத்தாட்டம் போட வைத்து கலைஞரை குஷிபடுத்தியபோது தனியொருவனாக எதிர்த்து குரல்கொடுத்து  ரஜினியையே எழுந்து நின்று கிட்ட வைத்த சம்பவம் நம் அனைவருக்கும் நினைவிருக்கும். அதன்பின்பும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நின்று எதிர்ப்புகளை சம்பாதித்தவர் அவர்.
ரஜினி கமல் உள்ளிட்ட பலரும் மனதிற்குள் புழுங்கி வெளியே மானே தேனே பொன்மானே என்று நெஞ்சை நக்கிக்கொண்டிருந்தபோது பூனைக்கு முதலில் மணியைக் கட்டிய தைரியத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
பலமுறை விபத்துக்குள்ளாகி இனி எழுந்து நடப்பதே சாத்தியமில்லை என்ற நிலையிலும் தன் கடும் மன உறுதியினால் எல்லாவற்றிலுமிருந்து மீண்டவர் அஜித்.கண்டிப்பாக இந்த தோல்விகளிலிருந்தும்  மீண்டு மீண்டும் பல வெற்றிப் படங்களைத் தருவார் என்பது உறுதி. 40 வயது என்பது விக்ரம் ஒரு நடிகனாக அங்கீகரிக்கப் பட்ட வயது, ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக மாறிய வயது, கமல் தன் படங்களில் பல பரீட்சார்த்த முயற்சிகள் எடுத்த வயது. அமீர்கானும் ,சல்மானும் பல உச்சங்களைத் தொட்ட வயது. இன்னும் அஜித்திற்கு காலமிருக்கிறது. இந்த வயதுக்குள்ளேயே பெரிய அந்தஸ்தினை அடைந்து விட்டார். கண்டிப்பாக கவனமாக படங்களைத் தேர்வு செய்து நடித்தால் அவர் போகப் போகும் உயரம் அதிகம்.கண்டிப்பாக என் போன்ற ரசிகர்களின் ஆர்வங்களைப் பூர்த்தி செய்வார் என்று நம்புகிறேன்.
அடுத்தது வெங்கட் பிரபுவுடன் மங்கத்தா ஆடுகிறார்.























சென்னை 28 , சரோஜா நம்பிக்கை அளித்தாலும் கோவா கவலை கொள்ளச்செய்கிறது. என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

பின் குறிப்பு: தகவல்கள் பெரும்பாலும் என் நினைவிலிருந்தே எழுதப் பட்டது. ஏதேனும் பிழைகள் இருக்க வாய்ப்புள்ளது.
படங்கள் : கூகிளுக்கு நன்றி.