Sunday, December 19, 2010

மம்மொத்கள் ( MAMMOTHS) மீண்டும் பிறப்பது சாத்தியமா..?

ஜுராசிக் பார்க் படத்தில் டைனோசர்கள் மனிதனுடன் உலவுவதை பார்த்திருக்கிறோம். அது போல ஊழிப்பனிக் காலத்தில் வாழ்ந்த மிருகமான  வுல்லி மம்மோத் (Woolly Mammoth )  யானைகள் நம்முடன் சமகாலத்தில் உலவினால் எப்படி இருக்கும் ? சாத்தியம்  இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். 
இந்த துறையில் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட ஜப்பானிய ஆராய்ச்சியாளர் கஸு புமி கோட்டோ (Kazufumi Goto) கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு  மேலாக ஒரு உறைநிலை மம்மொத்தின் உடலத்தைத் தேடிவருகிறார். 2000 ஆண்டுவாக்கில் நேஷனல் ஜியாக்ரபிக் தொலைக்காட்சியில் அடிக்கடி இவரது வாசகம் ஒன்று ஒளிபரப்புவார்கள்
" எனக்கு ஒரு முழுமையான மம்மொத்தின் உறைநிலை உடல் கிடைத்தால் கண்டிப்பாக நான் மம்மொத்தை மீண்டும் பிறக்க வைப்பேன்" என்பதாகும். திடீரென்று அந்த ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது என்று இணையத்தில் தேடிய போது கிடைத்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர விரும்புகிறேன். 
மம்மொத்கள் Mammuthus Premigenius என்னும்  பிரிவினைச் சேர்ந்ததாகும்.
இந்திய யானைகள் Elephas maximus indicus என்னும் பிரிவினைச் சேர்ந்தவையாகும்.
ஆப்பிரிக்க யானைகள் Loxodonta africana  என்னும் பிரிவினைச் சேர்ந்தவையாகும்.











குளிரிலிருந்து தம்மை காத்துக்கொள்ள அடர்த்தியான  கம்பளி ரோமங்களைப் பெற்றிருந்ததனால்தான் அவை வுல்லி மம்மோத் (Woolly Mammoth)  என்று அழைக்கப்படுகிறது.

ஊழிப்பனிக் காலத்தில் அதாவது "Ice Age" என்று அழைக்கப்பட்ட காலத்தில் சுமார் 10000 வருடங்களுக்கு முன்பு அந்த இனம் மெல்ல மெல்ல மறைந்து போகத் தொடங்கியது. பெரும்பாலும் இன்றைய அலாஸ்கா , ரஷ்யாவின் சைபீரிய தூந்திரப் பிரதேசங்களில் அவை அதிகம் வாழ்ந்திருக்கின்றன என்று கணிக்கப் படுகிறது. உலகம் தன் தட்ப வெப்ப நிலையிலில்  மாறுதல் அடைந்ததால் அவற்றிற்கான உணவுத் தாவரங்கள் அழிந்து போய் அதனால் அந்த இனம் அழிந்திருக்கலாம் என்பது ஒரு ஊகம்.
மேலும் பனி உருகத்தொடங்கிய காலத்தில் அவற்றிற்கான வாழ்விடப் பற்றாக்குறை காரணமாகவும் அவை இறந்திருக்கலாம்.
சிலவேளை மாறும் தட்ப வெப்ப நிலைக்கேற்ப பரிணாம வளர்ச்சி அடைந்து தன்னைத் தகவமைவு செய்து கொள்ளாததினாலும் அவை இறந்திருக்கலாம் என்று எண்ணப் படுகிறது.

10000 B.C திரைப்படத்தில் நவீன கணினித் தொழில்நுட்ப உதவியுடன் மிக தத்ரூபமாக மம்மோத் யானைகளை வடிவமைத்திருப்பார்கள். அவற்றைப் பிரமிடுகள் கட்ட பயன்படுத்துவதாகக் காட்டியிருப்பார்கள். ஆனால் அத்தகைய பாலைவனச்  சூழலில் வுல்லி மம்மொத்களால் வாழ்ந்திருக்க முடியாது. அவற்றின் ரோமமே அவற்றைக் கொன்றிருக்கும்.
















க்ளோனிங் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு ஒரு அழிந்து போன இனத்தை மீண்டும் 
பிறக்கச்செய்ய முடியும் என்னும் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. 1990 இல் காஸு புமி  கோட்டோ
ஒரு நாட்டு வகை ஜப்பானிய பசு இனத்தை மீட்டெடுக்க இறந்த பசுவின் உயிரணுக்களை முதிர்ந்த கருமுட்டையில் செலுத்தி வெற்றிகரமாக மீட்டெடுத்திருக்கிறார்.

தற்போது அவர் வேண்டுவதெல்லாம் DNA மூலக் கூறுகள் சிதையாமல் உள்ள ஒரு மம்மொத்தின் உடலம். தற்போது கிடைக்கப் பெற்ற சதைத் துணுக்குகளில் உள்ள DNA  மூலக்கூறுகள் 85 சதவிகிதம் மட்டுமே முழுமையாக உள்ளன. அவரது எண்ணம் என்னவென்றால் முதலில் ஒரு 100 சதவிகித DNA வைக் கொண்டு ஒரு ஆப்பிரிக்க யானை மூலம் ஒரு "மம்மோத் - ஆப்பிரிக்க யானை " கலப்பினத்தை உருவாக வேண்டும். பின்பு அந்த கலப்பின யானை கன்று மூலம் மம்மொத்தின் DNA  வைக் கொண்டு ஒரு முழு மம்மொத்தை உருவாக்கிவிடலாம் என்பதேயாகும்.இது ஒருவிதத்தில் பின்னோக்கிய பரிணாம வளர்ச்சி "Reverse  Evolution " என்று அழைக்கப்படுகிறது.
தற்போது ரஷ்ய சைபீரியப் பகுதியிலிருந்து  ஒரு யானை கன்றின் உறைநிலை உடல் கிடைக்கப் பெற்றுள்ளது.





















இம்முறை கோட்டோ வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அவ்வாறு ஒருவேளை உருவாகிவிட்டால் அவை இன்றைய சைபீரியப்  பகுதிகளில் வாழ முடியும்.
நாமும் ஜுராசிக் பார்க் படத்தில் டைநோசரைப்  பார்க்கப் போவது போல தூந்திரப் பகுதிக்கு சென்று பார்க்கலாம்.
 
இயற்கைக்கு எதிரான மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் இயற்கை கடுமையான எதிர்வினையைக் கொண்டிருக்கும்.மம்மோத் விஷயத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை ஆனால் இப்போதே விஞ்ஞானிகள் இது தடுக்கப் படவேண்டும் .இது இயற்கைக்கு எதிரானது என்று முறையிடுகின்றனர்.
ஒருவேளை இந்தியாவில் மம்மொத்கள் வந்தால் என்னவாகும் ? யானைப்பாகன் மம்மொத்தின் ரோமத்தை ஒவ்வொன்றாகப் பிடுங்கி விற்று மம்மொத்தை மொட்டையடிப்பான். சாதாரண யானைக்குப் பதில் மம்மொத்தை வைத்துப்  பிச்சை எடுப்பார்கள். எப்படியானாலும் அவை திரும்பவும் பூமிக்கு வராமலிருப்பதே
நன்று என்று நினைக்கிறேன்.

நன்றி :

மேலும் அதிக தகவல்களுக்கு மேற்குறிப்பிட்ட இணைப்பில் பார்க்கவும்.



Sunday, December 12, 2010

வலைப்பதிவுலகின் எழுத்து நடை ஒரு பார்வை

வலைப்பூக்களில் மொழிநடையை மூன்று  வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒன்று, தேர்ந்த இலக்கியவாதியின் நடையைப் பின்பற்றுதல் இதில் பல சிக்கல்கள் உள்ளன.எந்தவகையான ஆளுமையைப் பின்பற்றி நம் மொழிநடையை அமைத்துக்கொள்வது என்பது முதல் விஷயம்.
அதிலும் பார்த்தோமானால் இன்றைய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஜெயமோகன் மற்று சாரு நிவேதிதா இருவரின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்.
முன்னவரைப் பின்பற்றுபவர்கள் அனைத்து வார்த்தைகளையும்
  தமிழ்ப்படுத்துகிறேன் பேர்வழி என்று படாத பாடு படுத்திவிடுவர்.மிக எளிய வார்த்தைகளையும் சற்று வேறுவிதமாகக் கூற முற்படுவர்.
புறவயமாக சிந்தித்தல் , அகவயமான எண்ணங்கள் , பொதுவாக நான் அவதானித்த வகையில் , மேலதிக தகவல்கள் என்பன போன்ற வார்த்தைகளை
  புழக்கத்தில் விட்டு சற்றே ஒரு சிற்றிலக்கிய ஒப்பனை செய்வது ஒருவகை.
இலங்கையில் யுத்தம் உக்கிரமாய் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நமது நாளிதழ்கள் புதிதாகக் கொண்டுவந்த வார்த்தைகளே மேலதிகம், பாரிய யுத்தம், காணொளி, சமர் என்பன போன்ற
  நற்றமிழ் வார்த்தைகள். இவற்றை போர் தமிழ்நாட்டுக்கு அளித்த கொடையாகக் கொள்ளலாம்.
வலைப்பதிவர்கள் இவ்வாறான வார்த்தைகளை அதிகம்  புழக்கத்தில் விட்டு தங்களை சற்றே வேறுபடுத்திக் காட்ட முயல்வர்.
பார்த்தீர்களா நான் ஒரு புதிய கலைச்சொல்லை தமிழுக்குத்
   தந்துவிட்டேன் என்பதான கர்வம் அது.இதில் ஒன்றும் தவறில்லை என்றாலும் அதனைப் படிக்கும்போது இயல்புக்கு மாறான ஒரு எண்ணம் நம்முள் எழும்பும். ஆனால் காலப்போக்கில் இச்சொற்களை நாம் படிக்கப் படிக்க மெல்ல நம்முள் ஒரு இயல்பான சொல்லாக அது உருமாறும் என்பது என் எண்ணம். இது ஆரோக்கியமான ஒன்றாகும்.
ஒருவனின் அன்றாட வாழ்க்கைக்கு அவன் ஈட்டும் பொருள் பற்றிக் குறிப்பிடும்போது இப்போதெல்லாம் அனைவரும் " வாழ்வியல் ஆதாரம் " என்னும் வார்த்தையை பயன்படுத்துகின்றனர். இயல் என்று முடியும் எதுவும் அதுபற்றிய படிப்பினைக் குறிப்பதாகும். அறிவியல் , பொறியியல் என்பன போன்ற வார்த்தைகளில் பொறியியல் என்பது , பொறிகள் குறித்த படிப்பு. எனும்போது வாழ்க்கை குறித்த படிப்பு வாழ்வியல் ஆகலாம். ஆங்கிலத்தில் "logy" என்று  முடியும்  விதமாய்  அமையும்  சொற்கள் இதற்கு சமமாக வரும்.
இவ்வாறாக வாழ்வில் ஆதாரம் எனும் சொல் சரியானதல்ல. விஜய் டிவி யின் நீயா நானா கோபிநாத் இன்னுமே இவ்வாறாகக் கூறுகிறார். நானும் அவ்வாறே தவறாகப் புரிந்து கொண்டிருந்தேன். குரு ஜெயமோகன்தான் இதுகுறித்து தெளிவுபடுத்தினார். எதோ ஒருவகையில் புதிய தமிழ் சொற்கள் பயன்பாட்டுக்கு வருவதில் மகிழ்ச்சியே.
உதாரணமாக "RESOLUTION" எனும் சொல் அதாவது செல் போன் திரையின் காட்சித்  தெளிவினைக் குறிக்கவும் , டிஜிட்டல் கேமராவின் காட்சித் தெளிவினைக் குறிக்கவும் உதவும் இச்சொல்லானது  தமிழில் "பிரிதிறன்" என்று அறியப்படுகிறது. காணொளி எனும் வார்த்தை போல இதுவும் ஈழப் போர் காலங்களில் என் அறிவுக்கு எட்டிய சொல்லாகும்.தமிழ் நாட்டில் மும்மொழி கரைத்துக் குடித்த செம்மொழி அறிஞரால் கூட இதுபோன்ற ஒன்றினை அளித்திருக்க முடியாது என்பது என் எண்ணம்.
இரண்டாவதாக  ஒரு முக்கியமான மொழிநடை புரட்சி எழுத்து. புரட்சி என்னும் சொல்லே தமிழ்நாட்டில் இப்போது ஒரு அர்த்தம் இழந்த சொல்லாகிற்று. போன தலைமுறையில் S.S.ராஜேந்தின் புரட்சி நடிகர்.அவர் புரட்சிகரமான வசனங்கள் பேசி நடித்தார். இப்போது புரட்சித்  தளபதி விஷால். விஷால் என்ன புரட்சி செய்து விட்டார் ? ஒன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வில்லன்களைப் புரட்டி எடுக்கிறார். சற்றே வித்தியாசம் காட்ட வேண்டுமென்றால் அதிகபட்சமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வில்லன்களைப் புரட்டி எடுக்கிறார்.இவ்வாறாக புரட்டி எடுப்பவர் எல்லாம் புரட்சி செய்பவர் என்றால் ஒவ்வொரு உணவகத்திலும் தோசை பரோட்டாவை புரட்டிப் போடும் மாஸ்டர்களெல்லாம்,இனி புரட்சி மாஸ்டர் என்று அழைக்கப் படவேண்டும்.  
பதிவுலகில் இவ்வாறான புரட்சி எழுத்துக்களை தொடர்ந்து நிறுவிக்கொண்டிருப்பவர் அன்பு அண்ணன் சாரு நிவேதிதாதான்.அப்பப்பப்பா என்ன ஒரு புரட்சி.அதாவது  கெட்ட வார்த்தைகளை நேரடியாக எழுதினால் அதுதான் புரட்சி. இன்னும் சில பெண்ணியக் கவிஞர்கள் இருக்கிறார்கள்.பெண்களின் அவையங்களை கொச்சையாகக் கூறுதல் அவர்கள் பொறுத்த மட்டில் புரட்சி.அவ்வார்த்தைகளை நான் இங்கு எழுதினால் நானும் ஒரு புரட்சி எழுத்தாளனே .
உலகின் ஆதிசெயலை ஆண் பெண் பந்தத்தை பச்சையாகக் கூறினால் அதுதான் புரட்சி. பதிவுலகின் கட்டற்ற சுதந்திரத்தை ஆக்கப்பூர்வமாக அன்றி, படிக்கும் வாசகனுக்கு ஒரு அதிர்ச்சி அளிக்க மட்டுமே பான்படுத்துவதே இன்றைய நிலையில் ஒரு புரட்சியாகிப் போனது.
இன்னும் ஒருவகையான மொழிநடை இருக்கிறது.அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை வேறு தளங்களிலிருந்து வெட்டி ஒட்டி கடைசியில் தன்  கருத்தினை ஒரு வரியில் கூறுவது. இது ஒரு சுலபமான வழி என்றாலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இது ஒருவகையில் பயனுள்ளாதாக இருக்கிறது.
மேற்கூறிய வகைகளெல்லாம் பதிவர்களால் ஒரு 15 சதவிகிதம் பயன்படுத்தப் படுகிறது என்று கொள்ளலாம். எனில் பெரும்பான்மை வகிப்பது " வம்பு" எனும் மொழிநடையே. சில முக்கியமான தலைப்புக்கள் சினிமாவில் MGR  சிவாஜி , ரஜினி கமல்,அஜித் விஜய்,சிம்பு தனுஷ் , இளையராஜா ரஹ்மான் . இதில் நானும் விதிவிலக்கல்ல.எழுத்துலகம் என்றால் பெரும்பாலான  வம்புகளின் தலைப்பு "ஜெயமோகன் சாரு நிவேதிதா" இதுவே  மூன்றாவது நடை.

ஆரம்பகால பதிவர்கள் அனைவரும் இது போன்ற மொழிநடைகளைக் கடந்தே வந்திருப்பர்.அபூர்வமாகவே தனக்கென ஒரு நடையை  முதலிலேயே அமைத்துக் கொண்டவர்கள் உண்டு.பெரும்பாலும் பதிவர்களாகிய நாமனைவருமே சுயபுராண பிதற்றல்களில் ஆரம்பித்திருப்போம்.அப்புறமாக் கொஞ்சம் நகைச்சுவையாக எழுத முயன்றிருப்போம் , பெரும்பாலும் வடிவேலு டயலாக்குகள் கைகொடுக்கும்.அப்புறம் விதவிதமான சொல்லாடல்கள் கண்டுபிடித்து அதைப் பயன்படுத்தி நமக்கு நாமே பாராட்டி மகிழ்ந்துகொள்வோம். இவ்வாறாக நம் சரக்கு எல்லாம் தீர்ந்து போய் புதிதாக நாம் ஒன்றை உருவாக்க முயலும்போதுதான் நமக்கான மொழிநடையை நாம் அறிந்துகொள்ள முடியும்.இந்த நிலைகள் எல்லாம் கடந்து போய் தற்போது எதை எழுதலாம் என்ற குழப்பத்தின் போதுதான் ஏன் இந்த மொழிநடை பற்றி எழுதக் கூடாது என்ற எண்ணம் வந்தது . எழுதிவிட்டேன்.  

Sunday, October 31, 2010

BBC காணொளித் தொகுப்பு-விலங்குகளின் விந்தை உலகம்-பாகம் 1

2001 இல் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது ஞாயிற்றுக் கிழமைகளில் சன் நியூஸ் அலைவரிசையில் காலை 11 மணிக்கு புதியதோர் உலகம் என்ற பெயரில் BBC யின் சில ஆவணப் படங்கள் ஒளிபரப்பப் பட்டன.SUPERNATURALS -THE UNSEEN POWERS OF ANIMALS என்பது ஆங்கிலத் தலைப்பு

விலங்குகளின் விந்தை உலகத்தை அதன் அருகே சென்று அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் மிகச் சிறப்பான முறையில் படம் பிடித்திருப்பார்கள்.
ஒவ்வொரு விலங்கின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்குப் பின்னும் இயற்கையின் விதி ஒன்று உள்ளது.சாதாரணமாக நம் கண்களுக்குப் புலப்படாத அவற்றைப் பற்றிய நிகழ்ச்சியே அது. உதாரணமாக வறட்சி காலத்தில் ஒரு மீன் எவ்வாறு அதனை சமாளிக்கிறது ? டால்பின்கள் மனிதனுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது எதனால்? திடீரென்று மீன்மழை பொழிவது எதனால் ? என்பது போன்ற பல இயற்கை விந்தைகளுக்கு விடை கூறியிருப்பார்கள்.
அது பற்றிய காணொளித் தொகுப்பே இப்பதிவு.
இதில் மிகவும் வியப்புக்குரியது ஒவ்வொரு உயிரின் நடவடிக்கைகளும் படமாக்கப்பட்டிருக்கும் விதம். மாட்ரிக்ஸ்,அந்நியன்,பாய்ஸ் போன்ற படங்களில் நாம் பார்த்த " TIME FREEZE " தொழில்நுட்பத்தினைப் போல (அதாவது சண்டைக்காட்சிகளில் ஒருவன் அந்தரத்தில் பறக்கும்போது அப்படியே உறைந்து சலனமின்றி நிற்கும்படியாகவும் அதனைச் சுற்றி கேமரா சுழன்று வரும்படியாகவும் காண்பிக்கப் படுமே அதுதான்) ஒன்றினையோ அல்லது வேறு எதோ ஒரு உத்தியைப் பயன்படுத்தியோ படமாகியிருப்பார்கள். உதாரணத்திற்கு இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டத்தினைப் பார்க்கவும்.

காணொளிகள் stream ஆக சிறிது தாமதமாகலாம் (உங்களுடைய Bandwidth அளவைப் பொறுத்து stream ஆகும் காலம் வேறுபடும்) .சற்று பொறுமையுடன் காத்திருந்து பார்க்கவும்.


Thursday, October 28, 2010

காடு-நாவல்; சமகாலத் தமிழிலக்கியத்தில் ஒரு செவ்வியல் படைப்பு

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தடுப்பணை அமைத்து நீரைத்திருப்பிவிடும் ஒரு சிறிய கட்டுமானப்பணி உரிமையாளரின் உறவினனான கிரிதரன் தன் வாழ்வின் நினைவுகளை மீட்டெடுப்பதை, நிகழ்காலத்தையும் கடந்தகாலத்தையும் முன்னும் பின்னுமாகக் கூறும் உத்தியில் அமைந்தது இந்தக் கதை. கதைக் களம் நாஞ்சில் நாடு எனப்படும் குமரி மாவட்டத்தின் மேற்குத்தொடற்சிமலைக் காடுகள்.இன்றளவும் தன்னுள் கொஞ்சம் ஈரத்தையும் பசுமையையும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் குமரிக் காடுகளில் நாப்பது ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்தில் நடந்ததாகப் புனையப்பட்டிருக்கிறது இந்நாவல்.

ஜெயமோகன் தனது கதைகளில் நாயகனை சாதனைகள் புரிபவனாக காட்டுவதில்லை. எல்லா பலகீனங்களும் ஆசாபாசங்களும்,சமரசங்களும் செய்துகொள்ளும் எளிய மனிதனாக, நித்தம் வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் மனிதனாக, சமயங்களில் குரூரமும் வஞ்சமும் பொய்மையும் நிறைந்தவனாக மொத்தத்தில் ஒரு கலவையான பாத்திரமாகப் படைக்கிறார்.

அவரது நாவல்கள் எளிய மனிதனின் வாழ்க்கைக்கு நெருங்கி காணப்படுவதன் காரணம் இதுவே. ஏழாம் உலகம் ஆகட்டும், மத்தகம், அனல் காற்று ஆகட்டும் நாயகன் ஒரு சராசரி மனிதனே. சமயங்களும் சூழ்நிலைகளுமே அவனை நல்லவனாகவும் கெட்டவனாகவும், துரோகம் செய்பவனாகவும் மாற்றுகிறதாகக் காட்டுகிறார். இதில் வரும் நாயகன் கிரிதரனும் அப்படித்தான்.மிகச் சாதாரணமாக கனவுலகில் மிதக்கும் மனிதன். சூழ்நிலைகளாலும் எளிதில் மற்றவர்களாலும் ஆட்டுவிக்கப்படும் மனிதனாகவும், தன்னுடைய இயலாமையின் மேல் கனத்த கோபமுற்று அதனை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாமல் உள்ளுக்குள் புழுங்கும் சராசரி மனிதன் அவன்.


கிரிதரன் ஒரு மிளாவைப் பார்ப்பதிலிருந்து தொடங்குகிறது நாவல்.
கிராமத்து வாழ்க்கையிலிருந்து பிழைப்புக்காக காடு புகும் அவன் பின்பு காட்டின் வசீகரத்தால் இழுக்கப் படுகிறான். தன் வாழ்வின் இறுதிவரை காட்டிலிருந்தும் அதன் நினைவுகளிலிருந்தும் வெளிவர முடியாமல் தன் கண்முன்னே காடு அழிவதைக் கண்டு மனம் வெதும்பிப் புலம்புவனாக வளைய வருகிறான்.

கதையில் வரும் மற்ற பாத்திரங்கள் மிக எளிய மக்கள்.ஆனால் அசாதாரணமான உண்மைகளை எளிய வார்த்தைகளில் கூறி பொட்டில் அறைவது போல் விளக்குவார்கள்.ஜெயமோகனின் எண்ணங்களின் ஆழமும் மொழியின் வீச்சும் பிரம்மாண்டமாய் வெளிப்படும் இடங்கள் நாவலில் அதிகம் வருகின்றன.

முக்கியமான கதாபாத்திரம் குட்டப்பன். தடுப்பணைகள் கட்டும் தேர்ந்த வேலையாளாகவும், காடுகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சிறந்த சுவையான உணவுகளை சமைப்பவனாவும், எந்தவிதமான எதிர் சூழ்நிலைகளிலும் மனம்தளராமல் சமாளிப்பவனாகவும், கிரிதரனுக்கு ஒரு வழிகாட்டி போலும் வருகிறான்.காட்டில் வாழ்ந்துவிட்டமையால் வெளயுலகிற்குப் போக விரும்பாதவனாயும், தன் மரணம் காட்டிலேயே, அதுவும் யானை மிதித்துக் கொன்றால் புண்ணியம் என்றும் கூறுகிறான்.

ஜெயமோகனுக்கு யானைகளின் மேலுள்ள அபாரமான காதல் , அதன் நடவடிக்கைகளை,யானையின் மன ஓட்டத்தை அவர் விவரிப்பதன் மூலம் புலனாகிறது. குமுதத்தில் ஒருமுறை கொச்சு கேசவன் குறித்து எழுதியிருந்தபோது படித்திருக்கிறேன் , பின்பு ஊமைச் செந்நாயில் ஒரு யானை வேட்டையாடப் படுவதைக் குறித்து எழுதியிருந்தார். அதனை படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் எனக்கு கணினித்திரை மறைந்து ஒரு திரைப்படம் காண்பதைப் போலத் தோன்றிற்று.

எப்போதும் யானையை ஒரு கரிய பாறைக்கு நிகராக ஒப்பிடுகிறார். உயிருள்ள ஒரு கரிய பாறை.காட்டின் ராஜா என்கிறார். மழையில் நனைந்து அழுக்குகள் களைந்து காணப்படும் யானையை கழுவப்பட்ட பாறை எனக் கூறுகிறார். மத்தகம் நாவலில் இன்னும் கூர்மையான விவரிப்புகளில் யானையின் இயல்புகளையும் அதன் கம்பீரத்தையும் விவரித்திருப்பார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவனாதலால் அவரது வட்டார வழக்கும் அதற்கே உரிய நுண்ணிய அங்கதச்சுவைகளும் கெடாமல் என்னால் நாவலில் ஒன்ற முடிந்தது.

ரெசாலம், குரிசு நாடார், சினேகம்மை,ரெஜினாள் போன்ற கதாபாத்திரங்கள் கடின உழைப்பாளிகளாகவும், என்றும் மாறா விசுவாசம் உள்ளவர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. அவர்கள் எதையும் வெகு சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்கள். கிரிதரனை ஒரு இளைஞனாக இருப்பினும் பாலகனாகவே பாவித்து அன்புடன் பழகுபவர்கள். ஒழுக்கநெறி குறித்து அவர்களுக்கு பெரிய விழுமியங்கள் ஒன்றும் இல்லை.அடுத்தவனை ஏமாற்றாமல் வாழ்வதுவரை எதுவும் தவறில்லை என்று இயல்பாய் இருப்பவர்கள்.

ரெசாலம் ஒரு முறை கறி சமைப்பதற்காக குட்டப்பனால் பிடித்து வரப்பட்ட தேவாங்கு ஒன்றினை தான் வளர்க்கப்போவதாகக் கூறி பிடிவாதத்துடன் வளர்க்க ஆரம்பிக்கிறார். அப்போது மற்றவர்கள் அந்த தேவாங்கினை அவரது மகள் என கிண்டல் செய்கின்றனர். எதைபற்றியும் கவலையின்றி வளர்க்கிறார். சில நாட்களில் தேவாங்கும் அவருடன் ஒன்றி விடுகிறது.

இதுகுறித்து கிரிதரன் ஒருமுறை கேட்கும்போது "காட்டில் இருக்கும் எல்லா ஜீவன்களும் அன்புக்கு ஏங்குவதாகவும் அன்பினால் அனைத்தையும் அடிமையாக்கிவிட முடியும்" என்று குட்டப்பன் கூறுகிறான்.

பின்னாளில் தேவாங்கை இழக்க நேரிடும் ரெசாலம் மனம் பிறழ்ந்து மீளாத் துயரில் ஆழ்ந்து விடுகிறார். அவரை வீட்டில் கொண்டுவிட வரும் கிரிதரன் திண்ணையில் மனநலம் குன்றிய சிறுமியைப் பார்க்கிறான். பெரிய தலையுடன் குச்சி உடம்புடன் மந்தமாக மிக மெதுவாக தலையைத் திருப்பி கிரிதரனைப் பார்க்கும் சிறுமியைக் கண்டவுடன் கிரிதரனுக்குப் புரிகிறது ,ரெசாலத்தின் மகளின் வடிவம்தான் அந்த தேவாங்கு என்று.

குரிசு நாடார் எப்போதும் பைபிளை பாராயணம் செய்கிறார். மிக மெதுவாக , ஒவ்வொரு எழுத்துக்களாகத்தான் அவரால் படிக்க முடியும்.பைபிள் அவரை ஒரு மர்ம வழிப்பாதையாக பல வருடங்களுக்கு அலைக்களித்ததாகச் சொல்கிறார் ஜெ.அது குறித்த நுண்ணிய நகைச்சுவை நிறைய நாவலில் உண்டு. எனினும் கிறித்தவ மதம் பலன் எதிர்பார்க்காமல் மலைவாழ் மக்களுக்கு ஆற்றும் சேவை குறித்து நாவலின் இறுதிப் பகுதிகளில் எழுதுகிறார்.

குரிசு நாடரும் ஊருக்குத் திரும்பிய உடன் ஆபேல் மற்று ராபி என்னும் இருவர் புதிதாக வேலைக்கு வருகின்றனர்.அவர்கள் இருவரும் வேலை செய்வது ஒரு கரிய இயந்திரத்தின் இரு பகுதிகள் இயங்குவது போல் என்று வர்ணிக்கிறார். இருவரும் நாவலின்படி இரட்டைப் பிணைகள். அதாவது வடிவேலு பாஷையில் கூறினால் "அவனா நீயி ..?" வகை. கடின உழைப்பாளிகள். ஒருவர் மீது ஒருவர் வெறித்தனமான பிரியம் கொண்டுள்ளவர்கள்.அவர்களுக்கிடையிலான அன்பை எவ்வாறு வகைப்படுத்துவது என்று தெரியவில்லை என்கிறார் ஜெ.ஒருவன் விஷக் காய்ச்சலில் துவளும்போது மற்றொருவன் கண்ணின் இமைபோல சேவகம் செய்து அவனைக் காக்கிறான்.

கதையில் கிரிதரனின் மலைஜாதிப் பெண்ணின் மீதான காதல் ஒரு கவிதை போல் வருகிறது.அந்தப் பெண் கரிய நிறத்தவள். ஜெ கருமையின் மீது மோகம் கொண்டவர். சிலைக்கு நிகரென அப்பெண்ணை வர்ணிக்கிறார். கருமைதான் அப்பழுக்கில்லாதது, அழகானது , மலையன் மகள் நீலி என்பதே அவள் பெயர்.அவளை சுனைப்பூ மகள் ,மழைக்கண் மடந்தை , அணங்கு என்று சங்கப் பாடல் வரிகள் மூலமாக உவமை சொல்கிறார். கிரிதரன் அவளுடன் பழகிய சொற்ப நாட்களின் நினைவுகளை காலம் முழுக்க மீட்டி எடுத்து அது தரும் இதத்திலேயே வாழ்கிறான். எல்லாவித தோல்விகளிருந்தும் அவன் ஆறுதல் அடைவது அவள் நினைவுகளால் தான்.

கிரிதரன் தனித்து முடிவெடுக்க முடியாதவனாக எப்போதும் அன்னையால் வழிநடத்தப்படுகிறான்.விருப்பமே இல்லாமல் வேணியை மணக்கிறான். தன் அன்னை இறக்கும்வரை அவளாலும், இறந்தபின் வேணியாலும் செலுத்தப்படுகிறான்.வேணியின் அம்மா , அவர்கள் வீட்டில் வேலை செய்யும் கண்டன் புலையன் , காட்டில் அவன் சந்திக்கும் எஞ்சினியர் அய்யர், ஊரில் அவனுக்கு ஆறுதல் அளிக்கும் போத்தி, போத்தியின் சகோதரி மனநலம் தவறி எப்போதும் கெட்டவார்த்தை பேசி எல்லாருக்கும் காட்சிப்பொருள் ஆகிய பெண் என்று ஒவ்வொரு பாத்திரங்களும் வெகு இயல்பாக ஆனால் ஆழமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன .

முதல் காதலின் இனிமையும் , தவிப்பும் பைத்தியக்காரத்தனங்களும், ஏக்கங்களும் சந்தோஷங்களும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குறிஞ்சிப் பூவைத்தேடி கிரியும் நீலியும் செல்லும் இடங்கள். பேச்சிமலையில் மலையன்களின் பறவை பாறை ஒன்றில் இருப்பதாகக் கூறும் கிளைக்கதைகள், காட்டில் வளர்ந்த மிகப்பெரும் காஞ்சிர மரத்தை வெட்டி ராஜாவுக்கு குடில் செய்யும் கதை , அதில் வரும் அமானுஷ்ய நிகழ்வுகள் என மிக சுவாரஸ்யமாகச் செல்கிறது இந்நாவல்.

நீலியின் இழப்பிற்குப்பின் கிரி மனம் தளருதல், ஊருக்குத்திரும்புதல், சம்பாதித்த பணத்தை இழத்தல் என்று அவனுடைய தோல்விகள் நம்மை கவலை கொள்ளச் செய்கின்றன.கடைசியில் புதிய எஞ்சினியர் மேனனின் மனைவி கிரிதரனை அணைக்கும் போது நீலியின் ஆன்மா தம்புரானே என்று கதறுவதுடன் நாவல் நிறைவுறுகிறது.
சற்று பொறுமையுடன் வாசிக்கப்படவேண்டிய இந்நாவல் கதையினூடாக காடு பற்றிய பல அரிய விஷயங்களைக் கூறுகின்றது. சாலை என்பது காட்டினை அழிக்கும் ஒரு பெரிய கை என்கிறார் ஜெ.

நாவலைப் படித்துமுடித்ததும் ஒரு பெரிய துக்கம் என்னுள் குடியேறியது.சிலநாட்களுக்கு காட்டுக்குள் உலவுவது போலவே இருந்தது.கண்டிப்பாக சமகாலத் தமிழில் ஒரு செவ்வியல் படைப்பு என்று இதனைக் கூறலாம். அனைவரும் படியுங்கள். www.udumalai.com இல் ஜெயமோகனின் அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றன.இன்னும் இந்நாவல் குறித்து எழுதப் பல விஷயங்கள் உள்ளன.அனைத்தையும் எழுதி விட்டால் நாவல் படிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால் முடித்துக்கொள்கிறேன்.

Friday, October 22, 2010

மண்மணம் மாறா வைகைப்புயல்

சுமார் 18 வருடங்களுக்கு முன்னே ஒல்லியாக கருப்பாக தீக்குச்சி போன்ற உருவத்துடன் தீசலாக ஒரு உருவம் டப்பாங்குத்து பாட்டுடன் போடா போடா புண்ணாக்கு என்று ஆடிய போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் ஒருநாள் தமிழர்களின் வாழ்வில், கலாச்சாரத்தில் அவன் ஒரு பகுதியாக மாறுவான் என்று.

அண்ணே அத எப்பிடி என் வாயால சொல்லுவேன் என்று ஒப்பாரி வைத்து கவுண்டரிடம் அடிவாங்கும்போது கவுண்டர் கூட நினைத்திருக்க மாட்டார் இவன் ஒருநாள் தமிழ் திரையுலகின் நகைச்சுவை சக்கரவர்த்தியாக மாறுவான் என்று.

ஒருகையை இழந்து அதை பொருட்படுத்தாமல் சிவாஜி கணேசனிடம் " என்ன இனி திங்கிறதும் கழுவுறதும் இதே கையிலதேன்” என்று மருகும் போது கமல் கூட நினைத்திருக்க மாட்டார் தன் தனித்துவமான நகைச்சுவை மூலம் தமிழ் நாட்டை வசப்படுத்தப் போவது இவன்தான் என்று.

இந்த பதிவில் நமது வைகைப் புயல் வடிவேலு குறித்து என்னுடைய எண்ணங்கள் நான் ரசித்த சில காட்சிகள் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கைப்புள்ளை வின்னர், சிரிப்பு ரௌடி நாய் சேகராக தலை நகரம், சிரிப்பு போலீஸ் என்கவுண்டர் ஏகாம்பரமாக மருதமலை என்று தன் நகைச்சுவையால் ஓட வைத்த படங்கள் நிறைய.இதெல்லாம் பரவலாக அனைவரும் கண்டுகளித்த படங்கள். அவரது நகைச்சுவைகளில் அதிகமாக கவனிக்கப்படாமல் போன சில சிறந்த நகைச்சுவை காட்சிகள் பற்றியதே இந்த தொகுப்பு.